
போதைப் பொருள் வழக்கு தொடர்பான விசாரணை நடந்த நிலையில் நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டார்.கடந்த 2 நாட்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று கிருஷ்ணாவை காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, தொழில் நுட்ப ஆதாரங்கள் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணா நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என சென்னை பெருநகரக் காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்…
சென்னை பெருநகர காவல் கிழக்கு மண்டலம் திருவல்லிக்கேணி மாவட்டம் -நுங்கம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரவு விடுதியில், 22.05.2025 ஆம் தேதி அன்று மது அருந்தச்சென்ற இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல்களின் காரணமாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 1 வழக்கில் 1 எதிரியும், 2 ஆவது வழக்கில் 7 எதிரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பிரதீப்குமார். கானா நாட்டைச்சேர்ந்த ஜான், பிரசாத் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து போதைப்பொருட்கள் வாங்கி, பயன்படுத்தி, நண்பர்களுக்கும் அளித்த ஸ்ரீகிருஷ்ணா என்பவரும், போதைப்பொருட்கள் வாங்கி, பயன்படுத்தி, விற்பனை செய்யும் கெவின் என்பவரும் உரிய ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள எதிரிகளையும், தேடப்பட்டு வந்த நிலையில், தொடர் புலன் விசாரணையின் நிகழ்வாக, அறிவியல் பூர்வமாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும், சாட்சிகள், ஆதாரங்கள் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையின் பேரில் ஜெஸ்வீர் (எ) கெவின் என்பவர் இன்று ( 26.06.2025) ஆம் தேதி கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து (1) Cocaine 1/2 Grams, 2)Methamphetamine -10.30 Grams, 3)MDMA 02.75 grams, 4) OG Ganja 2.40 grams, 5) Ganja 30 grams, 6) OC Paper 40 grams, 7) Ziplock Cover-40 Grams, 8) Weight Machine Small -2, 9) laptop -1, 10) Cellphone-1, 11) Rs.45,200 போன்ற போதைப்பொருட்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதில் ஸ்ரீ கிருஷ்ணா என்பவர், கெவின் என்பவரிடமிருந்து போதைப்பொருளை வாங்கி உட்கொள்ளும் பழக்கம் உடையவர். அதை அவர் நண்பர்களுடன் இணைந்து, பகிர்ந்து உட்கொள்ளும் பழக்கம் உள்ளவராக இருக்கிறார். மேலும் போதைப்பொருள் உட்கொள்பவருடன் வாட்ஸப் குழுக்களில் இணைந்து அது சம்மந்தமாக கருத்து பரிமாற்றங்களில், போதைப்பொருள் உட்கொள்ளும் இடம் மற்றும் நேரம் ஆகியவற்றைப் பகிர்ந்துள்ளார்.
இவர்களுடைய வங்கி பணப்பரிவர்த்தனை மற்றும் இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள், விசாரணை சாட்சியங்கள், தொழில் நுட்ப ஆதாரங்கள் அடிப்படையில் ஸ்ரீகிருஷ்ணா மற்றும் கெவின் ஆகிய இருவரும் கைது நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொக்கைன், ஓஜி கஞ்சா மற்றும் பிற போதைப்பொருளைக் கடத்துவது, தன் வசம் வைத்திருப்பது, உட்கொள்வது, மற்றவர்களுக்குக் கொடுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். போதைப்பொருளை வைத்திருப்பவர்களை பற்றிய தகவல் தெரிந்தும். காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் இருப்பதும் குற்றமாகக் கருதப்படும் என்று சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


