பாகிஸ்தானின் தென்மேற்கு பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக் கோரி கிளர்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.
அண்மையில் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்ட நிலையில், பலூச் அமைப்பின் தலைவர் மிர் யார் பலூச் நேற்று தனது சமூகவலை தளத்தில், 1947 ஆகஸ்ட் 11 இல் ஆங்கிலேயர் வெளியேறிய போதே நாங்கள் எங்கள் சுதந்திரத்தை அறிவித்து விட்டோம்.இந்திய ஊடகங்களும், யூடியூபர்களும் இனி பலுசிஸ்தானை பாகிஸ்தானின் மாகாணமாகக் குறிப்பிட வேண்டாம். நாங்கள் பாகிஸ்தானியர்கள் அல்ல, நாங்கள் பலுசிஸ்தானியர்கள். பலுசிஸ்தான் குடியரசாக எங்களை உலகம் அங்கீகரிக்க வேண்டும். பலுசிஸ்தானின் தூதரகத்தை டெல்லியில் அமைக்க இந்தியா அனுமதி தர வேண்டும். ஐநாவும் எங்களை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் எனக் கூறி உள்ளார்.
இதைத் தொடர்ந்து பலுசிஸ்தான் குடியரசு என்கிற சொல் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்நிலையல் பிஎல்ஏ செய்தித் தொடர்பாளர் ஜீயந்த் பலூச் நேற்று கூறுகையில்…., இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருந்தபோது ஆக்கிரமிப்பு பலுசிஸ்தானில் பாகிஸ்தான் இராணுவம் மற்றும் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு எதிராக 71 ஒருங்கிணைந்த தாக்குதல்களை பிஎல்ஏ நடத்தியது.
சமீபத்திய இந்தத் தாக்குதல் 51-க்கும் மேற்பட்ட இடங்களில் பல மணி நேரம் நீடித்தது. எதிரியை அழிப்பது மட்டுமே இந்தத் தாக்குதலின் நோக்கமல்ல. தற்காப்பு நிலைகள் மற்றும் தயார்நிலையை வலுப்படுத்துவதும் இதன் நோக்கமாகும் என்றார்.
இதுமட்டுமின்றி, இந்தியாவின் ஆதரவை நாங்கள் பெற்றால் இந்த தீவிரவாத அரசை (பாகிஸ்தானை) பலூச் தேசத்தால் ஒழிக்க முடியும். இது, அமைதியான, வளமான மற்றும் சுதந்திர பலுசிஸ்தான் உருவாக வழி வகுக்கும் என்றும் பிஎல்ஏ கூறியுள்ளது.
பலுசிஸ்தானின் இந்த கோரிக்கையை இந்தியாவும் ஐநாவும் ஏற்குமா? பாகிஸ்தானை பலவீனப்படுத்த இந்த நகர்வை இந்தியா மேற்கொள்ளுமா? என்கிற கேள்விகள் உலக அரங்கில் எழுந்துள்ளன.இன்னொரு பக்கம், இந்தியாவின் ஆதரவு காரணமாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து இந்தியா பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் இதுவரை எதுவும் வெளிப்படையாகச் சொல்லவில்லை.