எடப்பாடி மோடி சந்திப்பு – மாறுபட்ட தகவல்கள்

பிரதமர் மோடி இலங்கையில் உள்ள அனுராதாபுரத்தில் இருந்து இன்று காலை 10.40 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்படுகிறார். இராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் பகுதிக்கு 11.45 மணிக்கு வருகிறார். அவரை தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்கிறார். வரவேற்பு முடிந்ததும் 11.50 மணிக்கு மண்டபத்தில் இருந்து பாம்பன் செல்கிறார். அங்கு 12.25 மணிக்கு புதிய தொடர்வண்டிப் பாலத்தைத் திறந்து வைக்கிறார். பின்னர் 12.40 மணிக்கு இராமநாதசுவாமி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்கிறார். சிறப்பு பூஜைகளையும் செய்கிறார். அதைத் தொடர்ந்து 1.20 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்டு 1.30 மணிக்கு தமிழ்நாடு சுற்றுலா மைதானத்துக்கு வருகிறார்.அங்கு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பின்னர் 2.55 மணிக்கு மண்டபம் செல்கிறார். 3 மணிக்கு ஹெலிகாப்டரில் மதுரை செல்கிறார். 3.50 மணிக்கு மதுரை விமானநிலையம் சென்றடைகிறார். அங்கு முக்கிய நிர்வாகிகளைச் சந்திக்கிறார்.

அப்போது எடப்பாடி பழனிச்சாமி, மோடியைச் சந்திப்பார் என்று சொல்லப்பட்டது.தொடக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமி சம்மதம் தெரிவித்திருந்தார்.

அதன்பின், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், அண்ணாமலை ஆகியோரைச் சந்திக்க மோடி நேரம் ஒதுக்கியிருந்தார். இந்தத் தகவல் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியவந்தது.

இதனால் மோடியை வரிசையில் அவர்களுடன் நின்று சந்திக்க விரும்பவில்லை. இதனால் சென்னையில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி,மதுரையில் மோடியைச் சந்திப்பதைத் தவிர்த்து விட்டார் என்று சொல்லப்படுகிறது.

அதேநேரம்,டெல்லி சென்று மோடியைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், இன்றே அவர் மோடியைச் சந்திப்பார்,சந்திக்கும் வரை அது இரகசியமாகவே இருக்கும் என்றும் வேறுபட்ட தகவல்கள் உலவுகின்றன.

என்ன நடக்கப் போகிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து அதிமுக பாஜக கூட்டணிக்குச் சம்மதம் சொல்லிவிட்டு வந்த பின்பும் இப்படி சுமுகமற்ற சூழலும் வெவ்வேறான தகவல்கள் வெளியாவதாலும் அதிமுக தொண்டர்கள் பெரும் குழப்பத்தில் இருக்கின்றனர்.

Leave a Response