இந்திய ஒன்றியம் முழுவதும் இஸ்லாமிய மக்களின் வக்பு வாரிய சொத்துகள் பதிவு செய்யப்படுவதை ஒழுங்குபடுத்த வக்பு சட்டத்தில் (1995) திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. இந்தச் சட்ட திருத்த மசோதா கடந்த ஆண்டு மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆட்சிக்கு வந்தது முதல் இஸ்லாமியர்களுக்கு எதிராகவே செயல்பட்டு வரும் பாஜக,இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம், வக்ஃப் சொத்துகளை அபகரிக்கத் திட்டமிட்டுள்ளது என்று குற்றம் சாட்டப்படுகிறது.
இந்தச் சட்டத்திருத்தத்தை பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
திருத்தப்பட்ட வக்பு மசோதாவில் மத்திய வக்பு வாரியம் மற்றும் இதர வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாத இரண்டு உறுப்பினர்கள் கட்டாயம் இடம்பெறுவது இதில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விதி சர்ச்சைக்குரிய விசயமாக எதிர்க்கட்சிகள் தரப்பில் பார்க்கப்படுகிறது. இது அரசியலமைப்புக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
மேலும், இந்த மசோதாவை ஆராய நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் அங்கம் வகித்த தங்களது பரிந்துரைகள் கருத்தில் கொள்ளவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாதம் செய்தனர். இதன்மூலம் சிறுபான்மையின மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளதாக காங்கிரசுக்கட்சி விமர்சித்தது.
இவ்வளவு எதிர்ப்புகள் இருந்தபோதும் பிடிவாதமாக, வக்பு சட்ட திருத்த மசோதாவை ஒன்றிய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் நேற்று மதியம் 12 மணிக்கு தாக்கல் செய்தார்.
அப்போது முதல், ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் காரசார விவாதங்கள் நடந்தன.இதன்பின் நள்ளிரவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பிறகு வக்பு திருத்த மசோதா நிறைவேறியது. இதற்கு ஆதரவாக 288 பேரும், எதிராக 232 பேரும் வாக்களித்தனர். வியாழக்கிழமை (ஏப்ரல் 3) அதிகாலை 2 மணியளவில் இந்த மசோதா நிறைவேறியது.
மக்களவையைத் தொடர்ந்து இன்று (ஏப்ரல் 3) மாநிலங்களவையில் இந்த மசோதா விவாதிக்கப்பட உள்ளது.
மக்களவையில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து எங்களுக்கு எதிராக சட்டப்பூர்வமாகவே இவ்வளவு அநீதி நடக்கிறதே? என இஸ்லாமிய மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
பாராளுமன்றத்தில் இது நிறைவேற்றப்பட்டாலும் இதைத் திரும்பப் பெறும்வரை போராடுவோம் என்று எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.