பாஜக ஆளும் மாநிலங்களில் ஒரு மொழிக்கொள்கை – அம்பலப்படுத்தும் ப.சிதம்பரம்

தமிழ்நாட்டில் தற்போது இரு மொழிக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கை இடையே தீவிர விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆளும் திமுக, தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் எனக் கூறி வருகிறது. திமுகவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன.

அதேநேரத்தில், புதிய கல்விக் கொள்கையைப் பின்பற்றி தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இது குறித்த கேள்விக்கு முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருப்பதாவது….

மூன்று மொழிகள் கற்பிக்கப்பட வேண்டும் என சொல்லப்படும் இந்த நேரத்தில், நான் ஒரு விசயத்தை மிகவும் துணிச்சலாகச் சொல்வேன். இந்தியாவில் எந்த மாநிலமும் மும்மொழிக் கொள்கையைச் செயல்படுத்தவில்லை. குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில், ஒரு மொழிக் கொள்கைதான் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த மாநிலங்களில் பொதுவான மொழியாகவும், அலுவல் மொழியாகவும், பயிற்றுவிக்கும் மொழியாகவும் இந்திதான் இருக்கிறது.

கூடுதாக வேறு ஒரு கற்பிக்கப்படுகிறது என்றால் அது சமஸ்கிருதம்தான். இது இந்தியுடன் நெருங்கிய தொடர்புடையது. தமிழ் அல்லது தெலுங்கு பேசும் ஆசிரியர்கள் ஒருபுறம் இருக்கட்டும், ஆங்கிலம் பேசும் ஆசிரியர்களே மிகச் சில அரசுப் பள்ளிகளில்தான் உள்ளனர்.

தமிழ்நாட்டில், ஒன்றிய அரசு நடத்தும் 52 கேந்திரிய வித்யாலயாக்கள் உள்ளன. அங்கு பயிற்று மொழி ஆங்கிலம். அதோடு, இந்தி அல்லது சமஸ்கிருதம் இரண்டில் ஒன்றை இப்பள்ளிகள் கற்பிக்கின்றன. அவர்கள் தமிழ் மொழியைக் கற்பிப்பது கிடையாது. ஒன்றிய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயாவிலேயே மும்மொழிக் கொள்கை கிடையாது.

தமிழ்நாட்டில் கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் கட்சிகள் இருமொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தி வருகின்றன. தமிழ்நாட்டில் தமிழ் பயிற்று மொழியாக உள்ளது. இரண்டாவது மொழியாக ஆங்கிலம் உள்ளது.

அதேநேரத்தில், ஏராளமான தனியார் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுகிறது. சிபிஎஸ்இ பள்ளிகள், ஐசிஎஸ்இ பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுகிறது. இந்தி படிப்பதில் இருந்து எந்த ஒரு குழந்தையும் தடுக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு மகாத்மா காந்தியால் நிறுவப்பட்ட புகழ்பெற்ற ‘தக்ஷின் பாரத் இந்தி பிரச்சார சபா’ உள்ளது. இதன்மூலம், இலட்சக்கணக்கான மாணவர்கள் தாமாக முன்வந்து இந்தி படித்து பல்வேறு தேர்வுகளில் தேர்ச்சி பெறுகின்றனர். எனவே, ஒரு குழந்தை இந்தி படிக்க விரும்பினாலும் படிக்க முடியாது என்ற நிலை இல்லை.

இங்கே எதிர்ப்பு எங்கே எழுகிறது என்றால், அரசுப் பள்ளிகளில் இரண்டு மொழிகள் கற்பிக்கப்படுவதில்தான். நான் இன்னும் முன்னோக்கிச் சென்று கூற விரும்புவது என்னவென்றால், இரு மொழியைக்கூட நாம் சரியாக சொல்லிக் கொடுப்பதில்லை. கிராமப்புற குழந்தைகள், நகர்ப்புறங்களில் ஏழ்மை பின்னணி உள்ள குழந்தைகளில் எவ்வளவு பேருக்கு ஆங்கிலம் நன்றாக வருகிறது.

நான் நூற்றுக்கணக்கானோரைச் சந்திக்கிறேன். அவர்கள் ஆங்கிலம் படிக்கிறார்கள். ஆனால், அவர்களால் ஆங்கிலத்தில் பேச, எழுத முடிவதில்லை. எனவே, இருமொழிக் கெள்கை இருப்பது நல்லது. அந்த இரு மொழிக் கொள்கையை வெற்றிகரமானதாக மாற்ற வேண்டும். ஆங்கிலம் வெற்றிகரமாக கற்பிக்கப்பட வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் இரண்டாவது மொழியாக ஆங்கிலம் ஏற்கப்பட்டுள்ளது. எனவே, மூன்றாவது மொழி பற்றி பேசுவதற்கு முன் ஆங்கிலத்தை வெற்றிகரமாக கற்பிப்பது முக்கியம்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Response