திமுக கூட்டணியில் இராமநாதபுரம் தொகுதியில் யார் போட்டி?

இராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் தென் மண்டல அளவிலான பயிலரங்கம் நடைபெற்றது. கூட்டத்திற்கு இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினட் நவாஸ் கனி தலைமை வகித்தார். உயர் கல்வித் துறை அமைச்சர் இராஜகண்ணப்பன், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர்
மொய்தின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது….

75 ஆண்டு காலமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, திமுகவோடு நூறு சதவீத நட்புணர்வோடு பழகி வருகிறது. கூட்டணி தர்மத்தைக் காத்து வருகிறது. நிபந்தனை இல்லாத முழு ஆதரவு திமுக கூட்டணிக்கும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அளிக்கப்படும். மதச்சார்பற்ற ஆட்சியை மத்தியில் அமைக்க வேண்டும் என்ற மு.க.ஸ்டாலினுடைய எண்ணத்திற்கு ஏற்ப இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. தற்போது, நிதீஷ் குமார் போன்றவர்கள் விலகி இருப்பது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான்.பாஜக அல்லாத ஆட்சியை கண்டிப்பாக உருவாக்கியே தீருவோம்.

இராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி
போட்டியிட்டு வெற்றி பெற்றது. அதேபோல, தமிழ்நாட்டில் இராமநாதபுரம் தொகுதியை மீண்டும் கேட்டுப் பெற்று வெற்றி பெறுவோம். திமுக கூட்டணிக் கட்சிகள் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் கட்டுப்பட்டு செயல்படுவோம். தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் மதச்சார்பற்ற கூட்டணி அமைவதற்கு மு.க.ஸ்டாலின் முயற்சி எடுக்க வேண்டும்

இவ்வாறு அவர் பேசினார்.

திமுக அமைச்சர் இராஜகண்ணப்பன் முன்னிலையிலேயே காதர் மொய்தீன் இவ்வாறு பேசியிருப்பதால் அதிகாரப்பூர்வமற்ற முறையில் உடன்பாடு ஏற்பட்டுவிட்டதென்றும் உரிய நேரத்தில் அறிவிப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

Leave a Response