தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்…..
குமரிக் கடல் முதல் இமயப் பெருமலை வரை வாழும் மக்கள் ஒன்றுபட்ட சிந்தனையுடன் போராடிப் பெற்றதே இந்திய நாட்டின் விடுதலை. அப்போது வாழ்ந்த 30 கோடி மக்களும் நாட்டு விடுதலைக்காகப் போராடியதன் விளைவே 1947 ஆகஸ்ட் 15 அன்று கிடைத்த வெற்றிச் செய்தி. இன்று, நாம் இந்தியத் திருநாட்டின் 77 ஆவது விடுதலை நாளைக் கொண்டாடுகிறோம் என்றால், இதற்காகத் தியாகம் செய்த அனைவரது போராட்டத்துக்கும் தலைவணக்கம் செலுத்தவே. போராடிப் பெற்ற விடுதலையை எந்நாளும், எச்சூழலிலும் போற்றிப் பாதுகாப்பதே அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி.
விடுதலை அடைவதற்கு முன்பே, ‘ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்’ என்று அனைவரையும் பாடச் சொன்னார் மகாகவி பாரதியார். விடுதலை பெற்ற இந்தியாவானது, அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கும் இந்தியாவாகத்தான் இருக்கும் என்று அந்த தமிழ்க்கவி கனவு கண்டார். நாட்டின் 77 ஆவது விடுதலை நாளைக் கொண்டாடும் நேரத்தில், நேற்று முன்தினம் சென்னையைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஜெகதீஸ்வரன் மற்றும் அவரது தந்தை செல்வசேகர் ஆகிய இருவரும் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட செய்தி, நம் முன்னோர் தம் இன்னுயிர் ஈந்து நமக்களித்த விடுதலை, எல்லோருக்குமானதா அல்லது வசதி படைத்த வெகு சிலருக்கானதா என்ற கேள்வியை எழுப்புகிறது.
அரியலூர் அனிதாவில் தொடங்கி இதுவரை விலைமதிப்பில்லா பல மாணவச் செல்வங்களின் உயிர்களை, நீட் தேர்வு முறை காரணமாக தமிழ்நாட்டில் நாம் இழந்திருக்கிறோம். இவர்களின் மரணங்கள் எழுப்பும் தார்மீக கேள்விகள், நமது மனச்சாட்சியை உலுக்கி வருகிறது. ஆனால், ஏழை எளிய, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், அவர்தம் பெற்றோரின் கனவுகளை, எதிர்கால நல்வாய்ப்புகளை இழந்து வரும் நிலையை உணர மறுத்து, தமிழ்நாட்டு ஆளுநர் இரக்கமற்ற வகையில் பேசி வருகிறார்.
நீட் தேர்வு விலக்குக்கு நான் ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன். அந்த அதிகாரம் எனக்கு இருந்தால் நிச்சயம் நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன்’ என்று பொதுவெளியில் ஆளுநர் ஆர்.என்.இரவி பேசியிருப்பது தமிழ்நாட்டு மாணவர்களையும், இளைஞர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 7 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடந்து வரும் நீட் எதிர்ப்புப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் ஆளுநர் பொறுப்பில் இருப்பவர் பொறுப்பின்றி பேசுகிறார். தமிழ் மக்களை பற்றி அக்கறையுள்ளோர், தமிழர் உயிர் துறப்பதைக் கண்டு கலங்குவர். ஆனால், ஆளுநர் இரவியின் செயல்பாடுகள், ‘அதைப்பற்றி எனக்கு அக்கறை இல்லை’ என்பது போல உள்ளது.
இந்த நிலை மாறவே, நீட் தேர்வுக்கு விலக்குக் கோரி, சட்டம் இயற்றி, தமிழ்நாடு அரசு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளது. குடியரசுத் தலைவர், இதற்கு ஒப்புதல் வழங்கக் கோரி, இன்று (நேற்று) கடிதம் அனுப்புகிறேன். ஆளுநர், அரசியல் ரீதியாக திராவிடம், ஆரியம், திமுக, திருவள்ளுவர், வள்ளலார், சனாதனம் பற்றிப் பேசி வருவதை நாங்கள் மதிக்கவில்லை. அது கபட வேடம் என்பதை அறிந்தே இருக்கிறோம்; ஆரியப் புலம்பலாக ஒதுக்கித் தள்ளுகிறோம். ஆனால், ஏழை எளிய, விளிம்பு நிலை அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை அப்படித்தான் சிதைப்பேன் என்று நியமனப் பதவியில் இருக்கும் ஒரு ஆளுநர் கொக்கரிப்பார் என்றால், இது கல்வித் துறை மீது நடத்தப்படும் சதியாகவே கருதுகிறோம்.
தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலம் எங்களுக்கு முக்கியமானது. நாங்கள் இந்த மாநிலத்திற்கு, இந்த ஆண்டு வந்து, அடுத்த ஆண்டு செல்பவர்கள் அல்ல. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ் மக்களுக்காக என்றென்றும் உரிமைக் குரலை எழுப்பும் ஒரே கட்சி திமுக தான். பல்கலைக் கழகங்களைச் சிதைத்தும் – உயர் கல்வித் துறையைக் குழப்பியும் – தமிழ்நாடு சட்டமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு அனுமதி தராமலும் – இதன் உச்சமாக தமிழ்நாட்டு மாணவர்களை, பெற்றோர்களை, அவர்களது எதிர்காலத்தைச் சிதைக்கும் வகையில் பேசி வரும் ஆளுநரை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதன் அடையாளமாக ஆகஸ்ட் 15 அன்று, ஆளுநர் மாளிகையில், அவர் ஏற்பாடு செய்திருக்கும் தேநீர் விருந்தினை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்களை கிடப்பில் போட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் போட்டி அரசாங்கம் நடத்த முயல்வதால் ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரசுக் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர். பல்வேறு கூட்டணிக் கட்சிகளும் தேநீர் விருந்தைப் புறக்கணித்துள்ளன.
இந்நிலையில் தேநீர் விருந்தை இரத்து செய்வதாக நேற்று ஆளுநர் மாளிகை திடீர் அறிவிப்பை வெளியிட்டது. ஆளுநர் மாளிகை அறிக்கையில் கூறியிருப்பதாவது…..
கிண்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், ராஜ்பவனில் மழைநீர் தேங்கியுள்ளது. இன்றும் (15ம் தேதி) இடியுடன் கூடிய மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கன மழையைக் கருத்தில் கொண்டும், விருந்தினர்களுக்கு சிரமத்தை தவிர்ப்பதற்காகவும், ராஜ்பவனில் நடைபெற இருந்த தேநீர் விருந்து ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும் ராஜ்பவன் அரங்கத்தில் தேநீர் விருந்து விரைவில் நடத்தப்படும். அதற்கான தேதி மற்றும் நேரம் விரைவில் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் தில்லிப் பிரதிநிதியின் விருந்தைப் புறக்கணித்ததை எதிர்பாராத தில்லி விதிர்விதித்துப் போயிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.