அதிமுக எடப்பாடி அணி தேர்தல் அறிவிப்பு – ஓபிஎஸ் அணி கருத்து

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து நேற்று அறிவிப்பு செய்து இன்று வேட்புமனுவையும் தாக்கல் செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

இது குறித்துப் பேச ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பண்ருட்டி இராமச்சந்திரன் பேசுகையில்,

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சிறுபிள்ளைத்தனமானது. ஒரு தேர்தல் நடத்துவதெனில் வாக்காளர் பட்டியல் தொடங்கி பல்வேறு நடைமுறைகள் உள்ளன. அதன்படி தான் நடைபெற வேண்டும். அதிமுக மிகப்பெரிய மக்கள் இயக்கம். இந்த இயக்கத்தின் தேர்தல் சட்டவிதிகளின் படி தான் நடைபெற வேண்டும். இவை அனைத்தும் தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் உள்ளது.

விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் நடத்துவது, சட்ட விதிகளை மாற்றுவது மாபெரும் இயக்கத்தைக் கொச்சைப்படுத்தும் செயல். இதை நாங்கள் கண்டிக்கிறோம். சட்ட ரீதியாக இதை எதிர்கொள்வோம். ஆனால், இது வேதனையாக உள்ளது. மாவட்டந்தோறும் அதிமுக தொண்டர்களை ஓபிஎஸ் சந்திக்க உள்ளார் என அவர் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில்,

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிமுக அமைப்பு தேர்தல் நடைபெறும். தேர்தல் நடத்துவதற்கு முன்பாக உறுப்பினர் படிவம் அளிக்க வேண்டும். அடையாள அட்டை வழங்க வேண்டும். இதை எல்லாம் முடித்த பிறகுதான் அதிமுகவின் உட்சபட்ச பதவிக்குத் தேர்தல் நடைபெற வேண்டும். இவை எதுவும் செய்யாமல் பிக் பாக்கெட் அடிப்பது போன்று பதவியைப் பெற முயற்சிக்கிறார்கள். எதுவுமே முறைப்படி இல்லாமல் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படுகிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக இரட்டைஇலை சின்னத்தை விட்டுக்கொடுத்தோம்.அங்கு அதிமுகவின் தோல்விக்குக் காரணம் எடப்பாடி பழனிசாமிதான். அதிமுகவை மீட்கும் பணியை வேகமாகச் செய்வோம். சர்வாதிகாரமாக தேர்தல் அறிவிப்பை அறிவித்துள்ளார்கள். தொண்டர்கள் கலங்க வேண்டாம்

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response