நீட் தேர்வுக்கு விண்ணப்பம் – கால அவகாசம் நீட்டிப்பு

மருத்துவப் படிப்புகளுக்கு இந்திய ஒன்றியம் முழுவதும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வாக ‘நீட்’ தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ குழுமம் சட்டம் – 1956 மற்றும் பல் மருத்துவர் சட்டம் 1948-ல், 2018 ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு, இந்த நுழைவுத்தேர்வு கொண்டு வரப்பட்டது. அகில இந்திய மருத்துவ குழும இடைநிலை கல்வி வாரியத்தால் இத்தேர்வு நடத்தப்பட்டது. 2019 ஆம் ஆண்டு முதல் இந்த நுழைவுத் தேர்வை, தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.

தமிழ்நாட்டில் இதற்குக் கடும் எதிர்ப்பு இருக்கிறது. ஆனாலும், இவ்வாண்டு மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான இணைய விண்ணப்பப் பதிவு ஜூலை 13 ஆம் தேதி தொடங்கியது.

ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை நீட்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ntaneet.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 6 இலிருந்து ஆகஸ்ட் 10ஆம் தேதிவரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்டு 10 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் செலுத்த ஆகஸ்ட் 10 இரவு 11.50 மணி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய 11 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Response