கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாசக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவையில் நேற்று (மார்ச் 31) பரப்புரை மேற்கொண்டார்.
இதற்காக புளியகுளம் வந்த அவர், அங்கிருந்த வாகனப் பேரணியில் கலந்து கொண்டு, பரப்புரைக் கூட்டம் நடக்கும், ராஜவீதி தேர்முட்டி திடலுக்கு வந்தார். அந்த இருசக்கர வாகனப் பேரணியில் வந்த வாகனங்கள், பெரியகடைவீதியில் இருந்து நேராக சென்று, ஒப்பணக்கார வீதியில் வலதுபுறம் திரும்பி, ராஜவீதியை அடைந்து தேர்முட்டிக்குச் சென்றனர்.
முன்னதாக, இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட இருசக்கர வாகனத்தில், மாநகராட்சி அலுவலகம் உள்ள பெரியகடைவீதியில் இருந்து நேராக சென்று ஒப்பணக்கார வீதியை அடைந்து வலதுபுறமாக திரும்பும் போது, அங்கு சில கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. இதைப் பார்த்த, இருசக்கர வாகனப் பேரணியில் கலந்து கொண்டவர்கள், அங்கிருந்த கடையை மூட வலியுறுத்தி கல்வீசித் தாக்கினர்.
அதைத் தொடர்ந்து கட்சிக் கொடி கட்டப்பட்டு இருந்த தடியால் சில வியாபாரிகளைத் தாக்கினர். காவல்துறையினர் அங்கு வந்ததைத் தொடர்ந்து, இருசக்கர வாகனத்தில் வந்த பாசகவினர் அங்கிருந்து சென்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த உக்கடம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்நிகழ்வு தொடர்பாக,கோவை மாவட்ட பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான எஸ்.நாகராஜனிடம் அளித்த புகார் மனுவில்,
மேற்கண்ட விவகாரத்தில் தாக்குதல் மற்றும் கல்வீச்சில் ஈடுபட்ட பாசகவினர் மற்றும் வேட்பாளர் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாசகவின் இதுபோன்ற பிரச்சாரங்கள் கோவையில் திட்டமிட்டு கலவரங்களை ஏற்படுத்தி, அதை மத மோதல்களாக மாற்றி வெற்றி பெற்று விடலாம் என்ற திட்டத்தின் அடிப்படையிலேயே இது நடந்ததாகத் தெரிகிறது.
இதுபோன்றவற்றால் கோவையில் உள்ள ஜவுளித்துறைகள், நகைக்கடை, தொழில்கள் உட்பட பல்வேறு வியாபாரிகள் மற்றும் வியாபாரத் தலங்கள் பாதிக்கும் சூழல்கள் உருவாகும்.
இவ்விவகாரம் தொடர்பாக பாசக வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறு, மதவெறி தூண்டுதல் போன்றவற்ரைச் செய்தால் வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்கிற விதி இருப்பதால் இக்கோரிக்கை வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. தேர்தல் ஆணையம் நேர்மையாக நடந்தால் வானதி சீனிவாசன் தகுதி செய்யப்பட வாய்ப்புண்டு என்று சொல்கிறார்கள்.