உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழகப் பயணம் ஏற்கெனவே சில முறை கடைசி நேரத்தில் இரத்தானது.இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அமித்ஷா தமிழகத்திற்கு முதல் முறையாக இன்று வருகை தர உள்ளார்.
இன்று (நவம்பர் 21, சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு தில்லியில் இருந்து புறப்படும் அவர், பிற்பகல் 1.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கு அவருக்கு தமிழக அரசு மற்றும் பாசக கட்சி சார்பில் வரவேற்பளிக்கப்படுகிறது.
அதன்பின், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திரவிடுதிக்கு சாலைமார்க்கமாகச் சென்று 1.55 மணிக்கு அடைகிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுக்கும் அமித்ஷா, மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு கலைவாணர் அரங்கம் வருகிறார். கலைவாணர் அரங்கில் 4.30 மணி முதல் 6 மணி வரை அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.
அப்போது, 380 கோடி ரூபாய் செலவில் கட்டமைப்பக்கப்பட்டுள்ள தேர்வாய் கண்டிகை நீர்த் தேக்கத்தை மக்களுக்கு அர்ப்பணிக்கிறார் 67 கோடி ரூபாய் மதிப்பிலான மெட்ரோ ரயில் 2 ஆம் கட்டத் திட்டம், சென்னை வர்த்தக மைய விரிவாக்கம், இந்திய ஆயில் நிறுவன திட்டப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டுகிறார்.
அதைத்தொடர்ந்து மீண்டும் லீலா பேலஸுக்கு வரும் அவர், மாலை 6.20 மணி முதல் பாசக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இரண்டு மணி நேரம் நடைபெறும் இந்தக் கூட்டத்திற்குப் பின் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில், தமிழகத்தில் பாஜக கட்சி வளர்ச்சி, சட்டப்பேரவை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது.
இரவு சென்னையில் தங்கும் அமித் ஷா, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தில்லி புறப்பட்டுச் செல்கிறார்.
அமித்ஷாவின் இந்தப் பயணத்தின்போது நடிகர் ரஜினிகாந்தைச் சந்திக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அமித்ஷாவைச் சந்திக்க ரஜினி தவிர்க்கிறாராம். அவரைச் சம்மதிக்க வைத்து அமித்ஷா ரஜினி சந்திப்பை நடத்திவிட தீவிர முயற்சிகள் நடக்கிறதாம்.
என்ன நடக்கப்போகிறதெனப் பார்ப்போம்.