திமுக ஆட்சியில் நீட் தேர்வு இரத்து – மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு பலத்த வரவேற்பு

மருத்துவப் படிப்பில் சேர நீட் எனும் புதிய தேர்வை அறிவித்தது பாஜக அரசு. அதற்கு நாடு முழுதும் கல்வியாளர்களும் அறிஞர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதும் அதைத் திரும்பப் பெறவில்லை. இதனால் தமிழகத்தில் பல திறமை வாய்ந்த மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் அவலம் தொடர்கிறது.

நாளை(செப்.13) நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், தேர்வில் வெற்றி பெறுவோமா என்ற பயத்தில், மாணவி ஜோதி துர்கா, இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ரிசர்வ் லைன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த அதிர்ச்சியே இன்னும் விலகாத நிலையில் இன்று மாலை, நாளை நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் தருமபுரி மாணவர் ஆதித்யா என்பவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

நீட் தேர்வு எழுத இரண்டாம் முறையாக விண்ணப்பித்திருந்த நிலையில் மாணவர் ஆதித்யா தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. உருக்கமான கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டுதற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,

மாணவர்களே, தைரியமாக இருங்கள்! உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்!

திமுக ஆட்சியில் நீட் இரத்து செய்யப்படும். வாய்ப்பை இழந்தவர்களுக்கு பொதுத்தேர்வு அடிப்படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு உருவாக்கப்படும்.

எந்தப் போராட்டத்தையும் திமுக அரசு மேற்கொள்ளும்; இது உறுதி!

என்று கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்குப் பல தரப்பிலிருந்தும் பலத்த வரவேற்பு கிடைத்துவருகிறது.

Leave a Response