விடுதலைப்புலிகள் குறித்து அவதூறு வேண்டாம் – திமுகவினருக்குக் கட்டளையிட்ட தலைமை

ஈழத்தமிழர்களின் பெயரால் அரசியல் செய்ய விரும்புவோருக்கு, ஈழத்தமிழர் மீது எப்போதும் அக்கறை கொண்ட நாம் இடம் கொடுப்பது தேவையற்றது என திமுக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உலகப் பேரிடரான கொரோனா நோய்த் தொற்றிலிருந்து மனிதகுலத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் நிலையில், ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் பட்டினிச்சாவு ஏற்படாமல் இருக்க, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் உருவாக்கிய ‘ஒருங்கிணைவோம் வா’ செயல்திட்டத்தின் அடிப்படையில் பசிப்பிணி நீக்கும் வகையில் மாநிலத்தின் பல இடங்களிலும் சமையற்கூடங்கள் அமைத்து உணவு வழங்கி வருகிறது கழகம்.

கழகத் தலைவர் அறிவித்துள்ள ஹெல்ப்லைனுக்கு வரும் அழைப்புகளின் அடிப்படையில் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றி வருகிறோம். சமூக ஒழுங்கைக் கடைப்பிடித்து இந்தப் பணிகளை கவனமுடன் நாம் மேற்கொண்டு வருவதை அனைத்துத் தரப்பு மக்களும் வரவேற்று வருகிறார்கள்.

இந்த மகத்தான பணியில் அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டியதே நமது ஒரே இலக்கு!

கழகத் தலைவர் அவர்கள் கட்சி எல்லைகளைக் கடந்து, உலகெங்கும் வாழும் தமிழர்களுடன் காணொளிக் காட்சி வழியாக ஆலோசித்து, அவரவர் தேவைகளை அறிந்து அதற்கேற்ப உதவிகளை மேற்கொண்டு வருகிறார். அவருடன் கை கோர்த்து, உலகத் தமிழர்களை – மனிதகுலத்தை ஒருங்கிணைக்க வேண்டிய சூழலில், சமூக வலைதளங்களில் கழகத்தினரைத் திசைதிருப்புவதற்காக சிலர் திட்டமிட்டு செய்யும் சதிகளுக்கு, கழகத்தினர் ஆட்பட வேண்டாம் எனக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பாக, நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகவும் நலன்களுக்காகவும் 1956 ஆம் ஆண்டு முதல் குரல் கொடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். தமிழீழ உரிமையை வலியுறுத்தி டெசோ என்ற அமைப்பைத் தொடங்கி – அகில இந்தியத் தலைவர்களை அழைத்து மாநாடு நடத்தியவர் தலைவர் கலைஞர். வெளிக்கடை சிறையில் நடந்த வன்முறையில் தமிழினப் போராளிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டதைக் கண்டித்து மாபெரும் பேரணியை சென்னையில் நடத்திக் காட்டியவர் அவர். தமிழகத்திலிருந்த ஈழப் போராளிகளை நாடு கடத்த முயன்றபோது அதற்கு எதிராக, ஒருசில மணிநேரத்தில் இலட்சக்கணக்கான மக்களைத் திரட்டி கண்டனப் பேரணி நடத்தியவரும் கலைஞர்தான்.

தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இனமானப் பேராசிரியருடன் இணைந்து ராஜினாமா செய்தவர். இலங்கையிலிருந்து திரும்பிய இந்திய அமைதிக்காப்புப் படையை, ‘என் தமிழ்ச்சாதியை கொன்று திரும்பும் படையை வரவேற்க மாட்டேன்’ என முதலமைச்சராக இருந்தபோதே அறிவித்தவர். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருந்த காரணத்திற்காகவே கழகத்தின் ஆட்சி கலைக்கப்பட்டது என்பது வரலாறு.

ஈழத்தில் உள்ள அனைத்துப் போராளிக் குழுக்களும் சகோதர யுத்தத்தைக் கைவிட்டு, ஒன்றிணைந்து போராடி உரிமையை மீட்க வேண்டும் என்பதை தலைவர் கலைஞர் தொடர்ந்து வலியுறுத்தினார். எல்லா அமைப்புகளையும் தன் உடன்பிறப்புகளாகவே கருதினார். விடுதலைப்புலி தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்டபோது, முதல்வர் பொறுப்பில் இருந்த கலைஞர் எழுதிய இரங்கல் கவிதையும்; அதற்காக அவரது ஆட்சியை கலைக்கச் சொல்லி கூப்பாடு போடப்பட்டதும் நாடறியும்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “போராளிகளுக்கு மரணமில்லை” என்று சொன்னவர் தலைவர் கலைஞர். அவருக்கு எல்லாருமே உடன்பிறப்புகள்தான். பாரபட்சமோ – பாகுபாடோ கிடையாது. ஒரு மூத்த சகோதரராகவே அவருடைய கருத்துகளும் ஆதரவும் ஆலோசனைகளும் இருந்துள்ளன.

தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்திற்கும் தலைவர் கலைஞர் அவர்களே பதிலளித்திருக்கிறார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக தனது அதிகார எல்லைக்குள்ளும், அதனைக் கடந்தும் மத்திய அரசிடம் ஈழத்தமிழர் நலனுக்காகப் பாடுபட்டிருக்கிறார். இலங்கை மலையகத் தமிழர்கள் இந்தியா அனுப்பப்பட்டபோது தமிழகத்தில் அவர்களுக்கான வாழ்வுரிமை தொடங்கி, ஈழ அகதிகள் முகாமில் உள்ள தொப்புள் கொடி சொந்தங்களுக்கு வாழ்வாதாராம் – கல்வி – வேலை என அனத்தும் கிடைப்பதற்கான திட்டங்கள் வரை பலவற்றையும் நிறைவேற்றியுள்ளார்.

இனம் – மதம் – சாதி என எந்தவகையில் மனிதர்கள் ஒடுக்கப்பட்டாலும் அவர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதுதான் கழகத்தின் கொள்கை. ஈழத்தமிழர்களை இனரீதியாக ஒடுக்குவதை எதிர்த்து ஐ.நா.மன்றம் வரை சென்று மனு அளித்தவர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின். வரலாற்றில் தொடரும் இந்த நெடிய போராட்டத்தில் தனிமனித தாக்குதல்கள், போராட்டங்கள் குறித்த கொச்சையான விமர்சனங்கள் ஆகியவற்றை சமூக வலைதளங்களில் உள்ள கழகத்தினரும் கழக ஆதரவாளர்களும் தவிர்த்திடுவது கட்டாயமாகும்.

ஈழத்தமிழர்களின் பெயரால் அரசியல் செய்ய விரும்புவோருக்கு, ஈழத்தமிழர் மீது எப்போதும் அக்கறை கொண்ட நாம் இடம் கொடுப்பது தேவையற்றது. பேரிடரை எதிர்கொள்ள வேண்டிய காலகட்டத்தில் வேறு இடர்கள் அனைத்தையும் புறக்கணியுங்கள். திசைதிருப்ப நினைப்போர் வெட்டுகின்ற சமூக வலைதளப் பள்ளங்களில் இடறி விழாதீர்கள்.

நம்முடைய இலக்கும் பயணமும் ஈழம் உள்ளிட்ட உலகெங்கும் வாழும் மக்களின் ஆதரவுடன் அவர்களுக்காகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கவனம் சிதையாமல் அதில் ஒருங்கிணைந்து பயணிப்போம்.

இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response