மாநிலங்களவை தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு – தேமுதிகவுக்கு இடமில்லை

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தற்போது உறுப்பினர்களாக இருக்கும் 55 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் திருச்சி சிவா (தி.மு.க.), டி.கே.ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), சசிகலா புஷ்பா (அ.தி.மு.க.), விஜிலா சத்யானந்த் (அ.தி.மு.க.), மேட்டுப்பாளையம் செல்வராஜ் (அ.தி.மு.க.), முத்துக்கருப்பன் (அ.தி.மு.க.) ஆகிய 6 பேரின் பதவிக்காலமும் நிறைவடைகிறது.

இந்த காலியிடங்களுக்கு புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக வருகிற 26 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 6 ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனுக்களை பெறுவதற்காக, தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநிலங்களவைத் தேர்தலுக்கான திமுக சார்பில் போடியிடும் வேட்பாளர்களை அக்கட்சி கடந்த வாரமே அறிவித்தது. ஆனால், அதிமுக அறிவிக்காமல் இருந்து வந்தது.

இந்த நிலையில்,இன்று அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,தம்பி துரை, கேபி முனுசாமி, ஜிகே வாசன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டதாக ஓபிஎஸ்- இபிஎஸ் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் உள்ள தமாகாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தேமுதிகவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அக்கட்சியினர் ஏமாற்றமடைந்திருக்கின்றனர்.

Leave a Response