ஐபிஎல் தள்ளி வைக்கப்படுமா? – இருவேறு கருத்துகளால் குழப்பம்

13 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் வருகிற 29 ஆம் தேதி தொடங்குகிறது. கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவுவதால் இந்தப் போட்டி தள்ளி வைக்கப்படலாம் என்ற சந்தேகம் கிளம்பி இருக்கிறது.

இதற்கிடையில் மராட்டிய மாநில சுகாதார துறை அமைச்சர் ராஜேஷ் டோப் அளித்த ஒரு பேட்டியில், ‘மக்கள் ஒரு இடத்தில் அதிக அளவில் கூடும் போது அங்கு ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தாக்கம் இருந்தாலும் அது வேகமாக மற்றவர்களுக்குப் பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே சிறிது காலத்துக்கு மக்கள் கூடும் நிகழ்ச்சிகள் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும். எனவே ஐ.பி.எல். போட்டியைத் தள்ளி வைக்கலாமா? என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது’ என்று கூறியிருந்தார்.

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்குலியிடம் கேட்ட போது, ‘ஐ.பி.எல். போட்டியைத் தள்ளி வைக்கும் எண்ணம் எதுவுமில்லை. போட்டி திட்டமிட்டபடி நடைபெறும். இந்தப் போட்டியுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் போட்டிக்கு முன்னதாகவும், போட்டியின் போதும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக மேற்கொள்ளும்’ என்றார்.

மாநில அமைச்சர் தள்ளி வைக்கலாமா? என்று ஆலோசனை ச்ய்கிறோம் என்கிறார், ஆனால் கங்குலி தள்ளி வைக்கும் எண்ணம் இல்லை என்கிறார். இப்படி இருவேறு கருத்துகள் வந்திருப்பதால் குழப்பம் நீடிக்கிறது.

Leave a Response