பழ.நெடுமாறன் பெ.மணியரசன் மீது தமிழக அரசு வழக்கு – கி.வெங்கட்ராமன் கண்டனம்

பாபர் மசூதித் தீர்ப்பைத் திறனாய்வு செய்த பழ.நெடுமாறன், பெ.மணியரசன்,அரங்க குணசேகரன் ஆகியோர் மீது வழக்கு போட்டிருப்பது கருத்துரிமையைப் பறித்துப் பழிவாங்கும் செயல் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளீயிட்டுள்ள அறிக்கையில்….

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை திறனாய்வு செய்து கவிதை ஒன்றை முகநூலில் வெளியிட்டதற்காக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் மீதும், அத்தீர்ப்பு குறித்து விமர்சனம் செய்ததற்காக தமிழர் தேசிய முன்னணித் தலைவர் திரு. பழ.நெடுமாறன், தமிழக மக்கள் புரட்சிக் கழகப் பொதுச்செயலாளர் தோழர் அரங்க.குணசேகரன் ஆகியோர் மீதும் தமிழ்நாடு அரசின் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. இது கருத்துரிமைக்கு எதிரான தாக்குதல் மட்டுமின்றி, ஆரிய மேலாண்மைக்கு ஆதரவான கருத்துகளுக்கு மட்டும்தான் சட்ட வாய்ப்பு உண்டு என்ற அச்சுறுத்தலும் ஆகும்!

ஆர்.எஸ்.எஸ். கும்பலால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதும், அதைத் தொடர்ந்த பல்வேறு மத மோதல்களும் வன்முறைகளும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் பதற்ற சூழ்நிலையை நிரந்தரமாக்கியது. மனித உரிமையிலும், சமூக நல்லிணக்கத்திலும் அக்கறை உள்ளவர்கள் இது தொடர்பான பல மட்ட வழக்குகளிலும் கவனம் செலுத்தி வந்திருக்கிறார்கள்; கருத்துக் கூறி வந்திருக்கிறார்கள்.

அதன் உச்சகட்டமாக, இச்சிக்கல் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு பல முனைகளிலும், பல மொழிகளிலும் திறனாய்வு செய்யப்பட்டிருக்கிறது. அத்தீர்ப்பை எதிர்த்து கருத்து வெளியிடப் படாத ஏடுகளே இல்லை என்ற அளவுக்கு – தொலைக்காட்சிகளே இல்லை என்ற அளவுக்கு – அத்தீர்ப்பு அலசப்பட்டிருக்கிறது.

பாபர் மசூதி இடிப்பு குறித்தும், அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்ற இந்திய அரசின் சட்டம் குறித்தும், வழிபாட்டுரிமையின் ஆழ அகலங்கள் குறித்தும், விவாதிக்கப்பட்ட வழக்குகளின் உச்சமாக இந்த வழக்கு கவனிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் எந்தத் தீர்ப்பு குறித்தும் எதிர்க் கருத்து கூறுவதோ, விவாதிப்பதோ, நீதிமன்ற அவமதிப்பு ஆகாது என்பதே சட்ட நெறிமுறை ஆகும். நீதிமன்றத் தீர்ப்புகள் பொது வெளியில் விவாதிக்கப்படுவதுதான், நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்க உதவும் என்பது ஏற்கப்பட்ட சனநாயகக் கொள்கை!

நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சனம் செய்ய குடிமக்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் உரிமை இல்லாதுபோனால், ஆட்சியாளர்களின் கையடக்க நிறுவனமாக நீதிமன்றம் தாழ்ந்துவிடும்.

இந்த நிலையில், பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் திறனாய்வு செய்து, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்களும், திரு. பழ.நெடுமாறன், திரு.அரங்க.குணசேகரன் ஆகியோரும் முகநூலில் கருத்து வெளியிட்டதற்காக தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகள் 66 (ஏ) – மின்னணு ஊடகம் மூலம் மக்களைத் தவறாக வழி நடத்துதல், பிரிவு 72 – இரகசியத் தன்மையையும் தனிநபர் உரிமையையும் மீறியது, பிரிவு 72 (ஏ) – சட்ட வழிப்பட்ட ஒப்பந்தத்தை மீறி தனிநபர் குறித்த தகவல்களை வெளியிடுவது ஆகியவற்றின் கீழும், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 228 – நீதிபதிகளின் மீது வேண்டுமென்றே அவமதிப்பான கருத்துகளை வெளியிட்டு நீதிமுறைமையில் குறுக்கிடுதல், 504 – பொது அமைதியை சீர்குலைக்கப் பொய்யான தகவல்களைப் பரப்புவது, 505 (2) – பல்வேறு மத, இன சமூகங்களிடையே பகைமையை, வெறுப்பை அல்லது தவறான கருத்துகளை உருவாக்குவது, 12 – நீதிமன்ற அவமதிப்பு ஆகிய கொடும் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது என்று நாளேடுகளில் செய்திகள் வந்துள்ளன.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்களின் திறனாய்வுக் கவிதையோ,
திரு.பழ.நெடுமாறன், தோழர் அரங்க.குணசேகரன் ஆகியோரின் அறிக்கைகளோ மேற்சொன்ன எந்தச் சட்டத்திற்கும் முரணானது அல்ல என்பதை அவற்றைப் படித்துப் பார்க்கிற யாரும் புரிந்து கொள்ள முடியும்.

ஆயினும், இந்துத்துவா என்ற பெயரிலான தங்களது ஆரிய மேலாதிக்கக் கருத்துகளைத் தவிர வேறு எந்த கருத்துகளுக்கும் சட்ட வழிப்பட்ட உரிமை இல்லை என்பதை, வன்முறை உள்ளிட்ட எல்லா வழிகளிலும் தெரிவித்து வரும் பா.ச.க. அரசு – தம் சொல் படி நடக்கும் தமிழ்நாடு அரசின் வழியாக இந்த வழக்கைத் தொடுத்துள்ளது.

கடந்த ஆண்டு (2019) நவம்பரில், இக்கருத்துகள் வெளியிடப்பட்டு கடந்த நான்கு மாதங்களில் தமிழ்நாட்டில் பாபர் மசூதி தீர்ப்பின் மீது எந்தவித மத மோதல்களோ, வன்முறைகளோ நிகழவில்லை என்பதே இந்த வழக்கு வேண்டுமென்றே புனையப்பட்ட பழிவாங்கும் வழக்கு என்பதை தெளிவுபடுத்தும்.

கருத்துரிமைக்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் எதிரான இந்த வழக்கைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வழக்கைத் திரும்பப் பெற வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response