குல்தீப் யாதவின் சுழலில் சிக்கிய மேற்கிந்தியத் தீவுகள் – ரசிகர்கள் கொண்டாட்டம்

இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே நீக்கப்பட்டு, ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டார்.

அதில்,‘டாஸ்’ ஜெயித்த மேற்கிந்தியத் தீவுகள் அணித்தலைவர் பொல்லார்ட் முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தார்.

இதன்படி லோகேஷ் ராகுலும், ரோகித் சர்மாவும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் புகுந்தனர். இருவரும் சில ஓவர்கள் நிதானத்தை கடைபிடித்தனர். பிறகு காட்ரெல் ஓவரில் 2 பவுண்டரியும், ஹோல்டரின் பந்து வீச்சில் சிக்சரும் அடித்து அதிரடி காட்டினார் லோகேஷ் ராகுல். ரோகித் சர்மா சற்று பொறுமையாகவே ஆடினார். தனது முதல் 30 பந்துகளில் 16 ரன் மட்டுமே எடுத்தார். போகப் போக இந்தியாவின் ரன்வேகம் அதிகரித்தது.

வலுவான அஸ்திவாரம் அமைத்து தந்த கூட்டணி 156 ரன்களை எட்டிய போது உடைந்திருக்க வேண்டியது. ரோகித் சர்மா 70 ரன்னில் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை ஹெட்மயர் கோட்டை விட்டார். இந்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட ரோகித் சர்மா 28 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து லோகேஷ் ராகுல் தனது 3 ஆவது சதத்தை எட்டினார்.

அணியின் ஸ்கோர் 227 ரன்களாக (37 ஓவர்) உயர்ந்த போது ராகுல் 102 ரன்களில் (104 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார்.

அடுத்து வந்த விராட் கோலி (0) சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். பொல்லார்ட் ஷாட்பிட்ச்சாக வேகத்தை குறைத்து வீசிய பந்தை கோலி அடித்த போது பேட்டின் விளிம்பில் பட்டு கேட்ச்சாக மாறிப் போனது. இதன் பிறகு ஸ்ரேயாஸ் அய்யர் வந்தார்.

செஞ்சுரிக்கு பிறகு ரோகித் சர்மா ரன்மழை பொழிந்தார். 4 ஆவது இரட்டை சதத்தை அடிக்கும் சந்தர்ப்பம் ரோகித் சர்மாவுக்கு கனிந்திருந்தாலும் துரதிர்ஷ்டவசமாக 44-வது ஓவரில் அவுட் ஆகி விட்டார். ரோகித் சர்மா 159 ரன்களில் (138 பந்து, 17 பவுண்டரி, 5 சிக்சர்) வெளியேறினார்.

இதன் பின்னர் ஸ்ரேயாஸ் அய்யருடன், இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் ஜோடி சேர்ந்து ருத்ர தாண்டவமாடினார். அல்ஜாரி ஜோசப்பின் ஓவரில் 2 சிக்சர்களை பறக்க விட்ட பண்ட், ‘சல்யூட் மன்னன்’ காட்ரெலின் ஒரே ஒவரில் 2 சிக்சர், 3 பவுண்டரிகளை தெறிக்கவிட்டார். ஸ்ரேயாஸ் அய்யரும் சுழற்பந்து வீச்சாளர் ரோஸ்டன் சேசின் ஓவரில் 4 சிக்சரும், ஒரு பவுண்டரியும் சாத்தியெடுத்தார்.

இவர்களின் அசாதாரணமான பேட்டிங்கால் 350 ரன்களை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் ஸ்கோர் அதையும் தாண்டிச் சென்றது. ரிஷாப் பண்ட் 16 பந்துகளில் 39 ரன்களும் (3 பவுண்டரி, 4 சிக்சர்), 6-வது அரைசதத்தை கடந்த ஸ்ரேயாஸ் அய்யர் 32 பந்துகளில் 53 ரன்களும் (3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினர்.

முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். கடைசி 10 ஓவர்களில் மட்டும் இந்திய வீரர்கள் 127 ரன்களை சேகரித்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

அடுத்து மெகா இலக்கை நோக்கி களம் இறங்கிய மேற்கிந்தியத்தீவுகள் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. முந்தைய ஆட்டத்தின் ஹீரோ ஹெட்மயர் (4 ரன்) 3-வது ரன்னுக்கு ஆசைப்பட்டு ரன்-அவுட்டில் வீழ்ந்தார். 86 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த நிலையில் விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப்பும், நிகோலஸ் பூரனும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இந்தியாவின் பீல்டிங் மெச்சும்படி இல்லை. ஷாய் ஹோப்புக்கு ரன் கணக்கை தொடங்கும் முன்பே ஸ்லிப்பில் நின்ற ராகுல் கேட்ச் வாய்ப்பை வீணடித்தார். பூரன் 22 ரன்னில் இருந்த போது தூக்கியடித்த பந்தை தீபக் சாஹர் தவற விட்டார். இதன் காரணமாக இவர்கள் இருவரும் கொஞ்ச நேரம் இந்திய பந்து வீச்சை பின்னியெடுத்தனர். ஆனால் இந்த ஜோடி பிரிந்ததும் ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. பூரன் 75 ரன்களில் (47 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்) கேட்ச் ஆனார். கேப்டன் பொல்லார்ட் (0) தாக்குப்பிடிக்கவில்லை. ஷாய் ஹோப் (78 ரன், 85 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) உள்பட 3 வீரர்களை தனது சுழலில் தொடர்ச்சியாக காலி செய்து குல்தீப் யாதவ் ஹாட்ரிக் சாதனை படைத்து அமர்க்களப்படுத்தினார்.

முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 43.3 ஓவர்களில் 280 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்துள்ளது. சென்னையில் நடந்த முதலாவது ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றிருந்தது. தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3 ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வருகிற 22 ஆம் தேதி கட்டாக்கில் நடக்கவிருக்கிறது.

Leave a Response