
ஐசிசி டி 20 உலகக் கோப்பை மட்டைப்பந்து போட்டித் தொடர் இலங்கையில் நடைபெற்றுவருகிறது.இதில், நேற்று கொழும்பு நகரில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற தகுத்திச்சுற்று ஆட்டத்தில்
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் சல்மான் அலி ஆகா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 7 வீரர்களை இழந்து 175 ஓட்டங்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் சைம் அயூப் 3 வீரர்களை வீழ்த்தினார். சல்மான் அலி ஆகா, ஷாகின் ஷா அப்ரிடி, உஸ்மான் தாரிக் ஆகியோர் தலா ஒருவரை வீழ்த்தினர்.
176 ஓட்டங்கள் என்கிற இலக்குடன் மட்டை பிடித்தது பாகிஸ்தான் அணி.
இந்திய அணியின் பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ஆட்டம் கண்டது. சாகிப்சாதா ஓட்டமெடுக்காமல் ஹர்திக் பாண்டியா பந்தில் நடையைக் கட்டினார். ஜஸ்பிரீத் பும்ரா வீசிய அடுத்த ஓவரில் சைம் அயூப் 6, சல்மான் அலி ஆகா 4 ஓட்டங்களில் வெளியேறினர். 13 ஓட்டங்களுக்கு 3 வீரர்களைப் பறிகொடுத்த பாகிஸ்தான் அணியால் அதன் பின்னர் மீள முடியவில்லை.
முடிவில் பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 114 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. ஷாகின் ஷா அப்ரிடி 19 பந்துகளில், ஒரு ஆறு, 2 நான்குகளுடன் 23 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல்
இருந்தார்.
இதனால், 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்திய அணிக்கு இது மூன்றாவது தொடர் வெற்றியாக அமைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தனது பிரிவில் 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.
இந்திய அணியுடன் விளையாட விருப்பமில்லை என்று பாகிஸ்தான் அணி சொன்னதை ஏற்காமல் அவர்களைக் கட்டாயப்படுத்தி விளையாட வைத்தார்கள்.ஆனால் அதில் அந்த அணி தோல்வியைத் தழுவ வேண்டியதாகிவிட்டது.
இதனால் பாகிஸ்தான் இரசிகர்கள் சோகத்திலும் இந்திய இரசிகர்கள் உற்சாகத்திலும் இருக்கிறார்கள்.


