கோதாவரி காவிரி இணைப்பு இருக்கட்டும் இந்த மாதம் தரவேண்டிய தண்ணீரை தருவீர்களா?

தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களும் புதுச்சேரி யூனியன் பிரதேசமும் காவிரி நீரைப் பகிர்ந்து கொள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசு அமைத்தது.

4 மாநிலங்களும் இந்த இரு அமைப்புகளுக்கும் தங்களது தரப்பில் தலா ஒரு பிரதிநிதியை நியமித்து உள்ளன.

காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை 2 முறை கூடி இருக்கிறது. கடைசியாகக் கடந்த ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி கூடியது. ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் கடைசியாக 23 ஆம் தேதி நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு குறைவாக இருப்பதால் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டால் மட்டுமே சமாளிக்க முடியும் என தமிழக அதிகாரிகள் வாதிட்டனர். ஆனால் அதுபற்றி அந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 3 ஆவது கூட்டம் டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் மசூத் உசைன் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் 4 மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்துகொள்கிறார்கள்.

கூட்டத்தில், “காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்வதைத் தடுக்க வேண்டும், தமிழகத்துக்கு திறந்துவிடப்பட வேண்டிய 9.19 டி.எம்.சி. தண்ணீரை ஜூன் 1 ஆம் தேதி முதல் திறந்து விட வேண்டும். ஜூலை மாதம் 30 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அதிகாரிகள் வலியுறுத்த இருப்பதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் ரேவண்ணா தமிழகம் வந்திருந்தபோது, காவிரியில் தற்போது தண்ணீர் திறந்துவிட இயலாது என்றும், அதிக மழை பெய்தால் மட்டுமே திறந்து விட முடியும் என்றும் கூறியிருந்தார்.

அணமியில், தமிழகத்தின் நலன் கருதி கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரி அறிவித்திருந்தார்.

பலரும் அதை வரவேற்றனர்.

கோதாவரி காவிரி இணைப்பு அப்புறம் முதலில் தமிழகத்துக்கு கர்நாடகம் தரவேண்டிய நீரைப் பெற்று தாகத்துக்கு உதவுவீர்களா? என்று தமிழக மக்கள் நிதின்கட்கரியிடம் கேட்கிறார்கள்.

Leave a Response