72 தொகுதிகளில் 4 ஆம் கட்டத் தேர்தல் – இன்று தொடங்கியது

2019 நாடாளுமன்றத் தேர்தல் – முதல் 3 கட்டங்களாக 302 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தள்ள நிலையில் இன்று (ஏப்ரல் 29 திங்கட்கிழமை) 9 மாநிலங்களில் 72 தொகுதிகளில் நான்காம் கட்டத் தேர்தல் நடக்கிறது.

இந்த நான்காம் கட்டத் தேர்தலில் 12 கோடியே 79 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றுள்ளனர். 961 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை இந்த வாக்காளர்கள் 1 லட்சத்து 40 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்குப்பதிவு செய்து தீர்மானிக்கின்றனர்.

இன்று மக்களவைத் தேர்தல் நடக்கும் தொகுதிகள் – பீகார் 5, ஜார்கண்ட் 3, மத்திய பிரதேசம் 6, மராட்டியம் 17, ஒடிசா 6, ராஜஸ்தான் 13, உத்தரபிரதேசம் 13, மேற்கு வங்காளம் 8, காஷ்மீரின் 1 (அனந்தநாக் தொகுதியில் குல்காம் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மட்டும்)

நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் 42 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

4 ஆவது கட்ட நாடாளுமன்றத் தேர்தலில் மராட்டியம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 3 பெரிய மாநிலங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மராட்டிய மாநிலத்தில் மும்பை மாநகரில் உள்ள 6 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடக்கிறது.

மும்பை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களத்தில் உள்ள நடிகை ஊர்மிளாவுக்கும், பா.ஜனதா கட்சி வேட்பாளர் கோபால் ஷெட்டிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

வட மத்தி மும்பையில் மறைந்த முன்னாள் மத்திய மந்திரி பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மகாஜனுக்கும்(பா.ஜனதா), மற்றொரு மறைந்த முன்னாள் மத்திய மந்திரியான சுனில் தத்தின் மகள் பிரியா தத்துக்கும் (காங்கிரஸ்) இடையே போட்டி.

மத்திய பிரதேசத்தைப் பொறுத்தமட்டில், முதல்வர் கமல்நாத் 9 முறை வென்ற சிந்த்வாரா நாடாளுமன்ற தொகுதியில் அவரது மகன் நகுல் காத் (காங்கிரஸ்) போட்டியிடுகிறார்.

முதல்வர் பதவியைத் தக்கவைப்பதற்காக கமல்நாத், சிந்த்வாரா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். தந்தையும், மகனும் ஒரே நாளில் ஒரே தொகுதியில் தேர்தலைச் சந்திக்கின்றனர்.

பீகாரில் பெகுசாராய் தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. இங்கு பா.ஜனதா வேட்பாளராக மத்திய மந்திரி கிரிராஜ்சிங்கும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளராக மாணவர் சங்க தலைவர் கன்னையா குமாரும் மோதுகின்றனர்.

இதே மாநிலத்தின் தர்பங்கா தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் காங்கிரஸ் வேட்பாளராகக் களம் இறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வென்றவர்.

மேற்கு வங்காளத்தில் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவும் (பாரதீய ஜனதா கட்சி), நடிகை மூன்மூன்சென்னும் (திரிணாமுல் காங்கிரஸ்) அசன்சோல் தொகுதியில் கடும் போட்டியில் உள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்ந்தது.

இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. மாலை 6 மணிக்கு முடிகிறது.

இன்று ஓட்டுப்பதிவு நடக்கிற 72 தொகுதிகளில் 45 தொகுதிகளை பாரதீய ஜனதா கட்சி கடந்த 2014 தேர்தலில் கைப்பற்றி இருந்தது. இதைத் தக்க வைத்தாக வேண்டிய நெருக்கடி அந்தக் கட்சிக்கு உள்ளது.

பீகார், ஜார்கண்ட், காஷ்மீர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய ஏழு மாநிலங்களில் 51 தொகுதிகளுக்கு 5 ஆவது கட்ட தேர்தல் மே மாதம் 6 ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

Leave a Response