சனவரி 2 ஆம் தேதி நிதியமைச்சர் அருண்ஜெட்லியை திருப்பூர் பாரளுமன்ற உறுப்பினர் சத்யபாமா சந்தித்தார். அப்போது அவர், ஆயிரக்கணக்கான கைத்தறி நெசவாளர்களின் நலனைப் பாதுகாக்க பவானி ஜமக்காளத்துக்கு ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்குக் கோரி மனு கொடுத்துள்ளார்.
அந்த மனுவில்,
2005 ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்று கையால் நெய்யப்பட்ட பவானி ஜமக்காளம் அங்கீகாரம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் பவானி மற்றும் அந்தியூர் பகுதிகளில் பாரம்பரியமாக செயல்பட்டுவரும் கைத்தறி நெசவாளர்கள் இந்த ஜமக்காளத்தை உருவாக்குகின்றனர். இந்தப் பகுதியின் பல்லாயிரக்கணக்கான கைத்தறி நெசவாளர்களுக்கு வேலை மற்றும் வாழ்வாதாரத்தை வழங்கும் 300 ஆண்டு கால பாரம்பரிய குடிசைத் தொழில் இதுவாகும்.
ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு முன் பவானி ஜமக்காளத்துக்கு அனைத்து வரிகளில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜி.எஸ்.டி வரி முறைமையில் பவானி ஜமக்காளம் உள்ளிட்ட தரைவிரிப்புகளுக்கு அரசு முன்னர் 12% சதவிகித வரி விதித்தது.
பின்னர் திருப்பூர் எம்.பி சத்தியபாமா அவர்கள் பாராளுமன்றத்தில் முன்வைத்தும், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி அவர்களிடம் நேரில், புள்ளிவிவரங்களுடன் தொடர்ந்து எடுத்துரைத்தன் பொருட்டு GST வரி 12% – 5% ஆககுறைக்கப்படது.
பத்தாண்டுகளுக்கு முன் 20000 குடும்பங்கள் இந்தத் தொழிலை நம்பி வாழ்ந்துவந்த நிலையில் தற்போது 6000 குடும்பங்கள் மட்டுமே இந்த பாரம்பரியத் தொழிலை நம்பியுள்ளன.ஜி.எஸ்.டி வரி 12% இருந்து 5% ஆக குறைக்கப்பட்ட பிறகும், நெசவாளர்களுக்குப் பயனளிக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே பவானி ஜமக்காளத் தயாரிப்பை மட்டுமே நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் பவானி ஜமக்காளத்துக்கு ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாண்புமிகு அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
300 ஆண்டுகாலப் பாரம்பரியமுள்ள தொழிலைப் பாதுகாக்க சத்யபாமா முயற்சி எடுத்துவருவதால் நெசவாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.