கலைஞருக்கு வணக்கமும் மரியாதையும் தொடரும் – கமல் இரங்கல்

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்று காலை ராஜாஜி அரங்கத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிறகு பேசிய கமல்ஹாசன் தெரிவித்ததாவது,

ஒரு நீண்ட சரித்திரத்தின் முற்றுப்புள்ளி அல்ல இது, ஒரு கமா என்று தான் நினைக்க வேண்டும். உணர்வும், இந்த சூழலும் எனது குரலை இந்த நிலைக்கு உயர்த்த முடியாத நிலைக்கு தள்ளியிருக்கிறது. கலைத்துறையில் ஒரு கடைக்குட்டி நான். நாட்டுக்கு ஒரு தலைவராக அவரை இழந்தது போக, தனிப்பட்ட முறையில் ஒரு பெரியவரை, குடும்பத்தின் தலைவரை இழந்தது போன்ற உணர்வு இருக்கிறது.

கலைத்துறையில் அவரது ரீங்காரம் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு நன்றி சொல்லும் ஆயிரமாயிரம் நடிகர்களில் நானும் ஒருவன். அந்த தமிழை பார்த்து மேலே ஏறி வந்திருக்கின்றேன். அவரை வணங்க வந்திருக்கிறேன். அவருக்கு வணக்கமும், மரியாதையும் தொடரும். இவ்வாறு பேசினார்.

Leave a Response