
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் மெர்சல். இப்படம் வெள்ளித் திரையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் இடம்பெற்ற ஜி.எஸ்.டி தொடர்பான வசனங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியது. தமிழக பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்புக் குரல் கிளப்பி, வசனங்களை நீக்க வலியுறுத்தினர்.
ஒருவழியாக பிரச்சனை ஓய்ந்த நிலையில், தெலுங்கில் மட்டும் ஜி.எஸ்.டி வசனங்கள் நீக்கப்பட்டு திரையிடப்பட்டன.படம் வெற்றி அடைந்ததை ஒட்டி, திரைக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் மெர்சல் திரைப்படம், மூன்று முகம் படத்தின் காப்பி என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக மூன்று முகம் படத்தின் ரீமேக் உரிமையை வைத்துள்ள ஃபைவ் ஸ்டார் பிலிம்ஸ் நிறுவனம், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து புகாருக்கு விளக்கம் அளிக்குமாறு, தயாரிப்பாளர் சங்கம் இயக்குநர் அட்லிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது


