பேரறிவாளன் விடுதலைவரை விடுப்பு கொடுங்கள் – சீமான் திடீர் கோரிக்கை

இரு மாதங்களாகச் சிறைவிடுப்பில் உள்ள பேரறிவாளனின் சிறைவிடுப்பை நீட்டிக்கக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (23-10-2017) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிக்குண்டு தான்செய்யாத குற்றத்திற்காகக் கால்நூற்றாண்டுக்கு மேலாகச் சிறையில் வாடிவரும் என்னுயிர் தம்பி பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள சிறைவிடுப்பை நீட்டிக்கச் செய்ய வேண்டும் என்று அவரது தாய் அற்புதம்மாள் தமிழக அரசுக்குக் வைத்திருக்கும் கோரிக்கையைக் கனிவோடு பரிசீலிக்க வேண்டியது தமிழக அரசின் இன்றியமையாத கடமையாகும். அதற்காக அவர் முன்வைக்கும் காரணங்கள் மிக மிக நியாயமானவையாகும்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலைவழக்கு என்பதால்தான் அனைத்து விதிகளும், மரபுகளும், சட்டங்களும் மீறப்பட்டிருக்கிறது. பேரறிவாளனைச் சிறையில் அடைத்து வைத்திருக்கிற சட்டமும் அதிகாரமும் அவர் வாங்கிக்கொடுத்த மின்கலனைக் கொண்டுதான் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது என்று எந்த இடத்திலும் நிறுபிக்கவில்லை.

இராஜீவ் காந்தியைக் கொலை செய்யப் பயன்படுத்திய பெல்ட் வெடிகுண்டைத் தயாரித்தவர் யாரென்று இதுவரை கண்டுபிடிக்க முடியாதநிலையில், இவ்வழக்கில், பேரறிவாளனின் வாக்குமூலங்களைப் பதிவுசெய்த புலனாய்வுத்துறை அதிகாரி தியாகராஜன், பேரறிவாளனின் வாக்குமூலங்களைத் தான் முழுமையாகப் பதிவுசெய்யவில்லையென்றும், அவ்வாறு பதிவுசெய்திருந்தால் அவர் விடுதலையாகிருப்பார் என்றும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளதோடு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்திலும் அதனைக் குறிப்பிட்டுள்ளார். இவற்றின்மூலம் தம்பி பேரறிவாளன் பக்கமிருக்கும் நியாயத்தையும், அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் அறிந்து கொள்ளலாம்.

26 ஆண்டுகளாய் சிறையில் இருந்த பேரறிவாளன் சிறைக்சாலையையே பல்கலைக்கழகம் போல மாற்றி, ஒரு பேராசிரியாரைப்போல மற்ற கைதிகளுக்குக் கல்வி கற்பித்திருப்பதும், ஒழுக்கத்திலும், நன்னடத்தையிலும் மற்ற கைதிகளுக்கு முன்மாதிரியாகவும். சிறைக்குள்ளேயே படித்து ஏராளமான பட்டங்களையும், பட்டயங்களையும் பெற்றிருப்பதும், மற்ற கைதிகளும் பட்டம் பெறுவதற்கு ஊக்கமளித்து ஊன்றுகோலாய் விளங்கியிருப்பதும், கால்நூற்றாண்டுச் சிறைவாசத்தில் ஒரு சிறுபிழைகூடக் காண முடியாதவகையில் சிறைவிதிகளையும், மரபுகளையும் கடைபிடித்திருப்பதும் நாடே அறிந்ததுதான்.

19 வயதில் சிறைப்பட்ட பேரறிவாளன், தனது இளமை காலங்களையெல்லாம் சிறைக்குள்ளே தொலைத்துவிட்டு இன்னும் நீதியையும் சட்டத்தையும் நம்பிப் போராடிக்கொண்டிருக்கிறார். பேரறிவாளனும், அவரது தாயாரும் முன்னெடுத்த 26 ஆண்டுகாலப் போராட்டத்தினாலும், தந்தை குயில்தாசனின் உடல்நலனைக் கருத்திற்கொண்டும் தமிழக அரசு இரு மாதங்கள் சிறைவிடுப்பு வழங்கியிருப்பதை மனதார வரவேற்கிறேன்.

சிறைவிடுப்பு என்பது ஒரு சலுகை அல்ல; அது ஒரு சிறைவாசியின் தார்மீக உரிமை. 26 ஆண்டுகள் சிறைவாழ்க்கையில் சிறைவிடுப்பை விரும்பாமல், ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ என்ற புரட்சியாளர் பிடெல் காஸ்ட்ரோவின் புரட்சிமொழி போலத் தன்னைக் குற்றமற்றவன் எனச் சட்டம் அங்கீகரித்து விடுதலைசெய்யும்வரை வெளியே வர மாட்டேன் என மனவுறுதி பூண்டிருந்த தம்பி பேரறிவாளனை தந்தையின் உடல்நிலையே சிறைவிடுப்புக்கு சம்மதிக்க வைத்தது.

தந்தையின் உடல்நிலை முழுமையாகக் குணமாவதற்குள்ளேயே பேரறிவாளனுக்கு விடுப்பு நாட்கள் முடிவடைவது வருத்தமளிக்கிறது. தந்தையைப் பிரிந்து பேரறிவாளன் சிறை திரும்பும் சூழல் ஏற்பட்டால் அது அவரது தந்தைக்குத் தாங்கொணாத் துயரத்தையும், மிகப்பெரிய மனச்சோர்வினையும் உண்டாக்கி உடல்நலனுக்குப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.

எதற்காகத் பேரறிவாளனுக்கு விடுப்பு தரப்பட்டதோ? அதற்கான காரணம் இன்னும் அப்படியே இருப்பதால் சிறைவிடுப்பைத் தமிழக அரசானது நீட்டிக்கச் செய்வதுதான் இந்நேரத்தில் முன்னெடுக்கிற சிறந்த நடவடிக்கையாக இருக்க முடியும். அப்போதுதான், ஏழு தமிழரின் விடுதலைக்காகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி சட்டப்போராட்டம் நடத்திய அம்மையார் ஜெயலலிதாவின் ஆட்சியைத் தொடர்வதாகக் கூறுவது சாலப்பொறுத்தமாய் இருக்கும்.

161வது சட்டப்பிரிவினைப் பயன்படுத்தி எழுவரையும் விடுதலை செய்யும் வரலாற்று வாய்ப்பு தமிழக அரசின் பொற்கரங்களில் தான் இன்னும் இருக்கிறது என்பதனையும் நினைவூட்டி, விடுதலையடையும் வரை தம்பி பேரறிவாளனின் சிறைவிடுப்பை நீட்டிக்கச் செய்ய வேண்டும் எனத் தமிழக அரசைக் கோருகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response