கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசுக்கு எதிராக கமல் வெளியிட்ட அறிக்கையில் திரைத்துறையில் வரிவிலக்கு சலுகை பெறுவதற்கு பெரிய அளவில் லஞ்சம் பெறப்படுகிறது என்று குற்றம் சாட்டியிருந்தார். இதனை இயக்குனரும், நடிகருமான பார்த்திபனும் ஒப்புக் கொண்டிருக்கிறார். என்னை போல ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் பயத்தின் காரணமாக லஞ்சம் கொடுக்கிறார்கள் என்று கமல் கூறியிருந்தார்.
இதுபற்றி நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் கூறியிருப்பதாவது, “வரிவிலக்கு பெறுவதற்கு லஞ்சம் கொடுக்கப்படுகிறது. என்னை போல ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் பயத்தின் காரணமாக லஞ்சம் கொடுக்கிறார்கள் என்று கமல் கூறியிருப்பது மிகச் சரியானது. அவர் சொல்லியிருக்கிற ஒரு சிலரில் நானும் ஒருவன். என் படத்துக்கும் லஞ்சம் கேட்டார்கள் நான் தர மறுத்துவிட்டேன். லஞ்சத்தை அவர்கள் நேரடியாக கேட்பதில்லை. மறைமுக கேட்கிறார்கள், அல்லது உணர்த்துகிறார்கள். ஆனால் இது இந்த ஆட்சியில் மட்டுமல்ல எல்லா ஆட்சியிலும் நடந்து வரும் விஷயம்” என கூறியுள்ளார்.
மேலும், தவறு நடக்கிறது என்று சுட்டிக் காட்டினால் அரசு இனி நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்று தான் சொல்ல வேண்டுமே தவிர நிரூபியுங்கள் பார்க்கலாம் என்று சொல்வது தேவையற்றது. ஓட்டுப் போட்ட மக்களுக்கு கேள்வி கேட்க உரிமையிருக்கிறது. கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியது அமைச்சர்களின் கடமை. என கூறியுள்ளார் பார்த்திபன்