7 தமிழர் விடுதலை இப்படிச் செய்யுங்கள் ஆளுநர் வழிக்கு வருவார் – பெ.ம அதிரடி யோசனை

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் தஞ்சை பேரியக்க அலுவலகத்தில் 21.10.2019 அன்று, பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்றது.

அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று….

ஏழு தமிழர் விடுதலை தீர்மானத்தை தமிழ்நாடு அரசு
மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப வேண்டும்!

இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாடு அமைச்சரவை கடந்த 2018 செப்டம்பர் 9ஆம் நாள் – பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, இராபர்ட்பயஸ், அருப்புக்கோட்டை இரவிச்சந்திரன், செயக்குமார் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்யும் அறிக்கையை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஓராண்டு கடந்தும் அவ்வறிக்கையை ஏற்று கையொப்பமிடாமல் வேண்டுமென்றே கிடப்பில் போட்டுள்ளார்.

அண்மையில் “இந்து” ஆங்கில நாளேட்டில் வெளியான செய்தியில், மேற்படி அறிக்கையை ஆளுநர் ஏற்கவில்லை என்றும், கையொப்பமிட முடியாது என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் ஆளுநர் கூறிவிட்டார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்ட உறுப்பு 163 (1)–இன்படி தனது அதிகாரத்திற்கு உட்பட்ட பொருளில், மாநில அமைச்சரவை அளிக்கும் பரிந்துரையை அப்படியே ஏற்று செயல்படுவது ஆளுநரின் சட்டப்படியான கடமையாகும். இதுகுறித்து, ஏற்கெனவே உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவாக வந்துள்ளன. 1999இல் நளினியின் சாவுத் தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைத்து அப்போதுள்ள தி.மு.க. அமைச்சரவை அளித்த பரிந்துரையை ஏற்க மறுத்தார் அன்றைய ஆளுநர் பாத்திமா பீவி.

அதுமட்டுமின்றி, இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கில் ஆளுநர் மாநில அரசின் பரிந்துரையை மறுப்பதற்கோ அல்லது தானே சொந்தமாக குற்றஞ்சாட்டப்பட்டவரை தூக்கிலிட வேண்டுமென்று ஆணையிடுவதற்கோ ஆளுநருக்கு அதிகாரமில்லை என்று தீர்ப்பளித்தார்கள். அதன்பின்னர், மாநில அரசின் பரிந்துரைப்படி நளினியின் சாவுத் தண்டனை வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

இராசீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள ஏழு தமிழர்களை விடுதலை செய்வது பற்றி நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசமைப்புச் சட்ட ஆயம் விசாரித்து, கடந்த 2018 ஆகத்தில் அளித்த தீர்ப்பிலும் ஏழு தமிழர்களை விடுதலை செய்கின்ற அதிகாரம் 161-இன் கீழ் தங்கு தடையின்றி மாநில அரசுக்கு இருக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்ட விரோதமாகச் செயல்படுகிறார். அவர் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், மோடி அரசு அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக – இனப்பாகுபாடு காட்டி ஏழு தமிழர்களுக்கு நீதி வழங்க மறுத்து வருவதால், அதே நிலைபாட்டை எடுத்துள்ள பன்வாரிலால் புரோகித்தை ஆதரிக்கிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு ஆளுநர் பதில் அளிக்கவில்லை என்று கூறி ஒதுங்கிக் கொள்வது தனது சட்டக்கடமையை நிறைவேற்ற மறுக்கும் செயல் மட்டுமல்ல, ஆளுநரின் சட்ட விரோதச் செயலுக்குத் துணை போகும் செயலும் ஆகும்.

மாநில அரசு அனுப்பும் பரிந்துரை / அறிக்கை ஆகியவற்றிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது அல்லது மறுப்பது என்பதை வெளிப்படுத்த சட்டத்தில் காலவரம்பு கோரப்படவில்லை. எனவே, அவர் இறுதிவரை ஒரு அறிக்கையை அல்லது பரிந்துரையை கிடப்பில் போட்டு சாகடித்து விடலாம் என்று புரிந்து கொள்வதோ வாதம் செய்வதோ மிகமிகத் தவறானது. ஆளுநரின் விருப்பத் தேர்வு என்பது சட்டத்திற்கு உட்பட்டுத்தான் அமைய வேண்டும். தமது சொந்த விருப்பு வெறுப்புக்கேற்ப பாகுபாடு காட்டி முடிவெடுக்க ஆளுநருக்கு சட்ட அனுமதி இல்லை.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் பலவற்றில் ஆளுநரின் விருப்பத் தேர்வுக்குள்ள வரம்புகள் கூறப்பட்டுள்ளன. எனவே, தமிழ்நாடு அரசு ஓராண்டுக்கு மேல் அமைச்சரவையின் முடிவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்கும் ஆளுநரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு நடவடிக்கையை கேள்விக்குள்ளாக்க வேண்டும். அத்துடன், மறுபடியும் ஏழு தமிழர் விடுதலையை அமைச்சரவையின் தீர்மானமாக்கி ஆளுநரின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும். அதற்கும் ஆளுநர் செயல்பட மறுத்தால், அவர் மீது வழக்குத் தொடுக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தமிழ்நாடு முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறது!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response