
இந்திய வரலாற்றை புரட்டிப் போட்ட இரண்டு இந்தி எதிர்ப்பு மொழிப் போராட்டம் நடைபெற்ற தமிழகத்தில், இப்போது மீண்டும் மொழியுரிமைக்கான குரல் ஓங்கத் தொடங்கிவிட்டது. வரலாற்றில் இருந்தே தமிழர்கள் பாடம் படிக்க வேண்டிய நிலையில் ஏற்கனவே நாம் நடத்திய மொழிப் போராட்டங்களை ஒட்டி இப்போது மேலும் சில கோரிக்கைகளை அத்துடன் இணைத்து போராட வேண்டிய தேவை எழுந்துள்ளது. அந்த வகையில் மொழிப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஈகியர்களையும் இணைத்துக் கொண்டு புதியதோர் மொழியுரிமைக்கான கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் வரலாற்று சிறப்பு மிக்க மொழி உரிமைக்கான கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
பல்வேறு அமைப்பினர் கொடுத்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த கூட்டமைப்புக்கு தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கம் என்று பெயர் சூட்டப்பட்டது . 04.01.2015 நடைபெற்ற கூட்டத்தின் முடிவில் ஒருங்கிணைப்புக் குழுவும், ஆலோசனைக் குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது. வரும் சனவரி 25 ஆம் தேதி கூட்டியக்கம் சார்பாக நடத்தப்படவேண்டிய பேரணி, நினைவேந்தல் நிகழ்ச்சியை வரும் சனவரி 11 ஆம் தேதி என்று இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
நாற்பதற்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் இந்த கூட்டியக்கதில் இன்று அதிகாரப் பூர்வமாக இணைந்தனர்.
இந்த கூட்டியக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளாராக திரு.ஆழி செந்தில்நாதன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தித் திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்தி பல்வேறு நிகழ்சிகளை இந்த ஆண்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் விரிவான செய்திகள் உடனுக்குடன் தெரிவிக்கப்படும். 2015 ஆம் ஆண்டு மொழியுரிமைக்கான ஆண்டாக தமிழ் அமைப்புகள் பிரகடனம் செய்தனர்.


