நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் ஜேப்பியார் மறைவுக்கு நடிகர்சங்கம் இரங்கல்

திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளரும் கல்வித் தாளாளருமான ஜேப்பியார் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழந்த இரங்கல் தெரிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் கல்வி தாளாளருமான திரு.ஜேப்பியார் அவர்களின் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகம் மற்றும் அனைத்து உறுப்பினர்களின் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் அவரது பிரிவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்துக்கு அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

திரு.ஜேப்பியார் அவர்கள் திரைத்துறையில் நடிகராக , இயக்குநராக ,தயாரிப்பாளராக பல நிலைகளில் அரும் பங்காற்றியவர். உதவி மனப்பான்மையுடன் திரைத்துறையின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர். மேலும் நடிகர் சங்கத்தின் மீதும் அதன் உறுப்பினர்களின் மீதும் நடிகர் சங்கத்தின் மீதும் அளவு கடந்த அன்பும் பாசமும் கொண்டவருமாவார்.

தற்போதையை நடிகர் சங்க நிர்வாகம் தேர்தலைச் சந்தித்த காலகட்டத்தில் அவரைச் சந்தித்த போது , நடிகர் சங்க எதிர் கால வளர்ச்சிப் பணிகள் பற்றி பேசுகையில் மிக ஆர்வத்துடன் அதை கேட்டு அறிந்து புதிய நிர்வாகம் அமைந்த பின் எடுக்கும் அனைத்து செயல்களுக்கும் , முடிவுகளுக்கும் நான் முழு ஓத்துழைப்பு தருவேன் என்னுடைய உதவி எப்போதும் உங்களுக்கு உண்டு என்று அன்போடு உறுதி அளித்தார்.

அதை தொடர்ந்து நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டும்போது அந்த கட்டிடத்துக்கு தேவையான அடிப்படை கட்டுமானப் பொருட்களை நான் எனது நிறுவனத்தின் மூலம் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார். அது மட்டும் இன்றி நடிகர்களாக இருந்து இன்று முதியவர்களாக மாறி , மருத்துவம் மற்றும் பொருளாதார அடிப்படை வசதி போராடிக் கொண்டிருக்கும் கலைஞர்களுக்கு என்னால் இயன்ற அளவிற்கு உதவிகளை நடிகர் சங்கம் மூலமாகச் செய்கிறேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

சமீபத்தில் அவரை அணுகி பேசுகையில் வரும் மாதத்தில் நாம் ஒன்றாக அமர்ந்து கலந்து ஆலோசித்து விரிவாக எல்லாவற்றையும் முடிவு செய்வோம் என்றும் மகிழ்ச்சிடன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் நம்மைவிட்டுப் பிரிந்தது தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கும் , திரைத்துறைக்கும் மிகப்பெரிய இழப்பாகும். கடந்த காலங்களில் அவர் எங்கள் மீது கொண்டிருந்த அன்புக்கும் பாசத்துக்கும் நாங்கள் என்றும் கடமைப்பட்டுள்ளோம். அவரது ஆத்மா இறைவனிடம் சேர்ந்து எங்களுடைய மூத்த கலைஞர்களின் ஆத்மாக்களோடு இணைந்து எங்களுக்கு வழி காட்டுவார் என்று நம்புகிறோம். ”

இவ்வாறு நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் கடிதத்தில் கூறியுள்ளது.

Leave a Response