விஜய் கர்நாடகா செல்வது மிகவும் தவறு – காரணங்களுடன் விளக்கும் அன்புமணி

வேளாண் அமைச்சர் வினோத் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,கர்நாடகாவில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி மேகதாது அணை தொடர்பாக நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில்,முதல்வர் விஜய் கலந்து கொண்டு அம்மாநில முதல்வர் டி.கே.சிவகுமாரிடம் பேசவுள்ளார் எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.கும்பகோணத்தில் இன்று மதியம் செய்தியாளர்களிடம் பேசிய அவர்….

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது.காவிரி நமது உரிமை.அதை விட்டுக் கொடுக்கமாட்டோம்,கர்நாடகாவில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி மேகதாது அணை தொடர்பாக நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில்,முதல்வர் விஜய் கலந்துகொண்டு அம்மாநில முதல்வர் டி.கே.சிவகுமாரிடம் பேசவுள்ளார் என்று தெரிவித்தார்.

கர்நாடகத்தில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தை ஏற்பாடு செய்வது யார்? மத்திய அரசா,கர்நாடக அரசா? என்பது குறித்து எந்த விவரமும் தெரியவில்லை.ஆனால்,மேகதாது குறித்து பேச்சு நடத்த முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு கர்நாடக அதிகாரிகள் மின்னஞ்சல் வாயிலாக அழைப்பு விடுத்திருக்கிறார்கள் என்று நேற்று ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் கர்நாடக அரசின் அழைப்பை ஏற்றுத்தான் முதல்வர் விஜய் அவர்கள் அம்மாநிலத்திற்கு பேச்சு நடத்த செல்வதாகத் தோன்றுகிறது.இது மிகவும் தவறு.

பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும்,மீண்டும் கூறி வருவது என்னவென்றால்,காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது என்பது தமிழ்நாட்டிற்கும்,கர்நாடகத்திற்கும் இடையிலான பிரச்சினை அல்ல.அது கர்நாடக அரசின் ஒருசார்பான கோரிக்கை மட்டும்தான்.அதுகுறித்து அந்த மாநில அரசுடன் நாம் எந்த பேச்சுக்களையும் நடத்தத் தேவையில்லை என்பதுதான்.

மேகதாது அணை குறித்து கர்நாடக அரசுடன் நாம் பேச்சு நடத்தினால் அதை இருதரப்பு பிரச்சினையாக ஏற்றுக்கொண்டு விட்டோம் என்று பொருளாகி விடும்.அதன் பின்னர் மேகதாது அணையைக் கட்டக்கூடாது என்பது தீர்வாக இருக்காது.மாறாக,மேகதாது அணையின் கொள்ளளவு எவ்வளவு டி.எம்.சியாக இருக்கவேண்டும்? அந்த அணையிலிருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கான நடைமுறைகள் என்னென்ன? என்பதுதான் தீர்வாக இருக்கும்.இது காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய உரிமைகளை மொத்தமாக கர்நாடகத்திடம் தாரைவார்ப்பதற்கு ஒப்பானது ஆகும்.

மேகதாது அணை குறித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்,இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக புதிய நடுவர்மன்றம் அமைக்கவேண்டும் என்ற வாசகம் சேர்க்கப்பட்டபோதே அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

மேகதாது அணை விவகாரத்திற்கு தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்கப்பட்டால் அது தமிழ்நாட்டிற்கு எந்த அளவுக்குப் பின்னடைவை ஏற்படுத்துமோ,அதைவிட மோசமான பின்னடைவை மேகதாது விவகாரம் குறித்து கர்நாடக அரசுடன் முதல்வர் விஜய் பேச்சு நடத்துவது ஏற்படுத்தி விடும்.மேகதாது போன்ற சர்ச்சைக்குரிய விவகாரங்களில் தமிழக அரசு தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கக்கூடாது.அதில் சம்பந்தப்பட்ட உழவர் அமைப்புகள்,அரசியல் கட்சிகள் போன்றவற்றுடன் ஆலோசனை நடத்திய பிறகுதான் நிலைப்பாட்டை தீர்மானிக்க வேண்டும்.

மேகதாது சிக்கல் குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டவேண்டும் என்று பாமக பல வாரங்களாக வலியுறுத்தி வரும் நிலையில்,அதை ஏற்காத அரசு,கர்நாடக அரசுடன் பேசும் முடிவை தன்னிச்சையாக எடுத்திருப்பது இவ்விவகாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

எனவே,மேகதாது அணை குறித்து பேச்சு நடத்துவதற்காக கர்நாடகத்திற்குச் செல்லும் முடிவை முதல்வர் விஜய் கைவிடவேண்டும்.மாறாக,சட்டப் போராட்டங்களின் மூலம் மேகதாது அணை கட்டுவதற்கான சதித் திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு முன்வரவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response