சீமானிடம் மன்னிப்பு கேள் அர்ச்சுனா – வெகுண்ட வேல்முருகன்

சீமான் குறித்து அநாகரிகமாகப் பேசும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்சசுனாவை கண்டித்து தவாக தலைவர் தி.வேல்முருகன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதன்விவரம்…..

இராமநாதன் அர்ச்சுனாவே மன்னிப்பு கேள்!
தமிழர் ஒற்றுமையைச் சிதைக்காதே!

நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள், தங்களுடைய அரசியல் உரிமை,மொழி உரிமை,நிலஉரிமை மற்றும் வாழ்வுரிமை மறுக்கப்பட்டதை எதிர்த்து தங்களுக்கான விடுதலைக்காக,75 ஆண்டுகளுக்கும் மேலாக மிகப்பெரிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.பல தலைமுறைகள் தங்கள் குழந்தைப்பருவத்தையும்,குடும்பங்களையும், கல்வியையும்,வாழ்வாதாரத்தையும் இழந்தனர்.
தமிழர்கள் மீது திட்டமிட்ட மொழி ஒடுக்குமுறை, கல்வி மறுப்பு,வேலைவாய்ப்பு பறிப்பு,நிலஅபகரிப்பு,இராணுவ அடக்குமுறை ஆகியவைத் தொடர்ந்து திணிக்கப்பட்டன. அமைதியாக உரிமை கேட்ட மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.கிராமங்கள் எரிக்கப்பட்டன.ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்கள்.பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். குழந்தைகள் பெற்றோரின் கண்முன்னே கொல்லப்பட்டார்கள்.முதியவர்கள் உயிருடன் எரிக்கப்பட்டார்கள்.மருத்துவமனைகள்,பள்ளிகள், பாதுகாப்பு வளையங்கள் கூட குண்டு மழையிலிருந்து தப்பிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டன.
உலகம் முழுவதிலும் தடைசெய்யப்பட்டிருந்த கொத்துக் குண்டுகள்,இரசாயன குண்டுகள்,பாஸ்பரஸ் குண்டுகள் போன்ற மனிதாபிமானமற்ற ஆயுதங்கள் தமிழர்கள் மீது வீசப்பட்டன.நமது தொப்புள்கொடி உறவுகள் கொத்துக்கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டார்கள். உலகத்தின் பல்வேறு நாடுகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்த இனப்படுகொலைக்கு துணை நின்றன.
இன்றளவும் உடலில் பாய்ந்த குண்டுகளை முழுமையாக அகற்றமுடியாமல்,அந்தக் குண்டுகளோடும் வலிகளோடும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற போராளிகளும் பொதுமக்களும் ஏராளம் உள்ளனர்.ஒவ்வொரு நாளும் உயிர்வலியுடனும் மனஉளைச்சலுடனும் அவர்கள் வாழ்க்கையைக் கடக்கமுடியாமல் வாழ்ந்து வருகின்றனர்.

போரின் காயங்கள் உடலில் மட்டுமல்ல.மனதிலும், தலைமுறைகளின் நினைவுகளிலும் ஆழமாகப் பதிந்திருக்கின்றன.
நிலங்களை இழந்தோம்.தலைமுறைகள் சேர்த்து வைத்தச் சொத்துகளை இழந்தோம்.வீடுகளை இழந்தோம். நமது வாழ்வாதாரங்களையும் நிம்மதியையும் இழந்தோம். ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ற பட்டியலில் இன்றுவரை நீதியின்றி காணாமல் போனவர்களாகவே உள்ளனர். அவர்களுக்கான நீதி இதுவரை கிடைக்கப்பெறவில்லை. தாய்மார்கள் இன்னும் தங்கள் பிள்ளைகளின் புகைப்படங்களைக் கையில் ஏந்தி நீதிக்காகக் கண்ணீரோடு காத்திருக்கிறார்கள்.

உயிரோடு இருக்கும்போதே தமிழர்களின் கண்கள் பிடுங்கி எடுக்கப்பட்டன.கைகள் வெட்டி எறியப்பட்டன. தமிழச்சிகளின் மார்புகள் அறுக்கப்பட்டன.தமிழ்ப்பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டு சிதைக்கப்பட்டார்கள்.பச்சிளம் குழந்தைகள் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டார்கள். கர்ப்பிணிப்பெண்கள் கூட இரக்கமின்றி கத்திகளால் கிழித்துக் கொல்லப்பட்டார்கள்.மனிதஇனமே தலைகுனிய வேண்டிய கொடுமைகள் ஈழமண்ணில் அரங்கேற்றப்பட்டன.

குறிப்பாக,2009 ஆம் ஆண்டு மே மாதம் 16,17, 18 ஆகிய நாட்களில்,முள்ளிவாய்க்காலில் பாதுகாப்பு வளையங்கள் என்று சொல்லப்பட்ட இடங்களுக்குள்ளே இலட்சக்கணக்கான மக்களை ஒன்றாகக் குவித்து செய்யப்பட்ட இனப்படுகொலை,தமிழின வரலாற்றில் என்றுமே மறக்கமுடியாத,மன்னிக்க முடியாத ஒன்றாகும். ஒரு இலட்சத்து எழுபத்தைந்தாயிரத்துக்கும் அதிகமான நமது தொப்புள்கொடி உறவுகள் மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்கள்.பதுங்குகுழிகளில் இருந்த குழந்தைகள் உடல்சிதறி உயிரிழந்தார்கள். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் உயிருடன் எரிக்கப்பட்டார்கள்.பட்டினியாலும் குண்டுவீச்சாலும் ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளிலும் கடற்கரைகளிலும் சடலங்களாகக் கிடந்தார்கள்.உலகநாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க,ஒரு இனத்தின் உயிர் பறிக்கப்பட்டது.
தாய்நிலத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள வெளியேறிய உறவுகள் தங்களின் எதிர்காலம் என்னவென்று தெரியாமல் உலகின் பல்வேறு நாடுகளில் சிதறி வாழ்ந்து வருகின்றனர்.தங்கள் மண்ணை இழந்த வலியோடு,அடையாளத்தைக் காப்பாற்றிக் கொள்ள போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியப் பெருநிலத்தில்,குறிப்பாகத் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் நமது தொப்புள்கொடி உறவுகள் இன்னமும் சிறை வாழ்க்கையைப் போன்ற சூழ்நிலைகளில் வாழ்ந்து வருகின்றனர்.பல தலைமுறைகள் கடந்தும் முழுமையான மனிதஉரிமைகளும் நிரந்தரமான வாழ்வாதாரமும் இல்லாமல் வாழவேண்டிய துயர்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த அத்தனைக் கொடுமைகளும் சகோதர யுத்தங்களாலும்,காட்டிக்கொடுப்புகளாலும்,இன ஒற்றுமையைப் பிளவுபடுத்திய துரோகங்களாலும் நடந்தேறியவை என்பதை வரலாறு மறைக்கவோ மறுக்கவோ முடியாது.தமிழர்களைத் தமிழர்களுக்கே எதிராக நிறுத்திய அரசியல் சூழ்ச்சிகளே தமிழினத்தின் அழிவை விரைவுபடுத்தின.இன்றும் அதேவேலையைச் செய்ய சில சக்திகள் துடிக்கின்றன.தமிழர் ஒற்றுமையைச் சிதைக்க,தமிழர்களையே கருவிகளாகப் பயன்படுத்துகிறார்கள்.நமது கைவிரல்களைக் கொண்டு நமது கண்களைக் குத்த முயற்சிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ்த் தேசிய அரசியல் வளர்ச்சி நிலைக்கு வருவதை விரும்பாத, அதை ஏற்றுக்கொள்ள முடியாத சக்திகளின் பின்புலத்தோடு இராமநாதன் அர்ச்சுனா போன்றவர்களைப் பயன்படுத்தி இப்படியான பிளவுபடுத்தும் அரசியல் நடத்தப்படுகிறதோ என்றே தோன்றுகிறது.ஒருபோதும் தமிழினம் இப்படியான செயல்களுக்கு இடமளிக்கக்கூடாது.

இனஒற்றுமையைச் சிதைக்கும் எந்தப்பேச்சும்,எந்த அரசியலும்,எந்தத் தூண்டுதலும்,தமிழர் வரலாற்றின் வலியை மீண்டும் உயிர்ப்பிக்கும் ஆபத்தான செயலாகும்.
இந்தச்சூழலில்,இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,சமீபத்தில் தமிழ்நாட்டிலும் இலங்கை நாடாளுமன்றத்திலும் பேசியிருக்கும் பேச்சுக்கள் மிகுந்த கண்டனத்திற்குரியவை.குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்களைக் குறிவைத்து “ஆயுதம் இருந்திருந்தால் சுட்டு இருப்பேன்” எனவும்,ஒருமையில் தரக்குறைவாகவும் பேசியிருப்பது அரசியல் நாகரிகத்திற்கும் சனநாயக மரபுகளுக்கும் முற்றிலும் எதிரானது.
ஒரு நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்,இன்னொரு நாட்டின் அரசியல்கட்சித் தலைவரை கொலைமிரட்டல் விடுக்கும் வகையில் பேசுவது சாதாரணமானதல்ல. இதனைச் சம்பந்தப்பட்ட அரசுகள் அமைதியாக வேடிக்கை பார்க்கின்றன என்றால்,அது தமிழர்களின் உணர்வுகளையும்,தமிழ்நாட்டு மக்களின் மனநிலையையும் மதிக்காத அணுகுமுறையாகவே பார்க்கிறோம்.

உலகம் முழுவதும் வாழும் தமிழர்களும்,தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களும்,சனநாயக சக்திகளும் இராமநாதன் அர்ச்சுனாவின் இந்தப்பேச்சை வன்மையாகக் கண்டிக்கவேண்டும்.அவர் உடனடியாக,தனது வார்த்தைகளைத் திரும்பப்பெற வேண்டும்.மேலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்களிடமும்,தமிழ்நாட்டு மக்களிடமும் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்கவேண்டும்.

தமிழர் இனம் தனது விடுதலைப் போராட்டத்தில் பின்னடைவைச் சந்தித்ததற்கான முக்கிய காரணம் சகோதரத் துரோகமும்,ஒற்றுமையின்மையும் என்பதனை இந்தநேரத்தில் மீண்டும் ஆழமாகப் பதிவு செய்கிறோம். இனஒற்றுமையே தமிழர் இனத்தின் பாதுகாப்பு.அதனைக் காப்பது ஒவ்வொரு தமிழரின் வரலாற்றுப்பொறுப்பு.
அன்புடன்
தி வேல்முருகன்.
தலைவர்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி,
மற்றும்
தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு.
மற்றும்
தமிழர் வாழ்வுரிமைக் கூட்டணி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response