
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.இதனால் திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு நடிகர் விஜய் ஆட்சியமைத்திருக்கிறார்.
இதுகுறித்து,தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனர் பழ.நெடுமாறன்,தலைவர் செ.ப.முத்தமிழ்மணி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை…
அண்மையில் நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி அதிக இடங்களில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளார். அவருக்கும், அவரது கட்சியைச் சார்ந்த அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்தினையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவ்வாறு அவர் ஆட்சி அமைப்பதற்கு உதவும் வகையில், தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த சில கட்சிகள் அவருக்கு ஆதரவு தருவதற்கு ஒப்புதல் கொடுத்த தி.மு.க. தலைவர் திரு.ஸ்டாலின் அவர்களைப் பாராட்டுகிறோம்.
இவ்வாறு செய்ததின் மூலம் தமிழ்நாட்டில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை என்று கூறி,ஆளுநர் ஆட்சி என்ற பெயரில் பா.ச.க.ஆட்சி அமைக்க வகுக்கப்பட்ட சதித் திட்டத்தைத் திரு.ஸ்டாலின் அவர்கள் முறியடித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் சனநாயகம் தழைப்பதற்கு உதவிய அவருடைய பெருந்தன்மையை அனைவரும் பாராட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை.
கடந்த தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நல்ல திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துமாறும் தனது தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறும் புதிய முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை வேண்டிக்கொண்டு மீண்டும் வாழ்த்துகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


