புதுவையில் வாக்குப்பதிவு முடிந்ததும் கட்டாய இந்தித்திணிப்பு – மக்கள் அதிர்ச்சி

புதுச்சேரியில் மும்மொழி கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளதால் 2026-27 கல்வி ஆண்டில் சிபிஎஸ்இ பள்ளிகளில் 6 ஆம் வகுப்பில் இருந்து இந்தி கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.பிரெஞ்சு மொழி பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவை 7 நாட்களுக்குள் அமல்படுத்த ஒன்றிய அரசு கெடு விதித்து உள்ளது. இதனால் மாணவர்கள், பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு என்று தனி கல்விவாரியம் கிடையாது.இதனால்,புதுவை,காரைக்கால் பகுதியில் தமிழ்நாடு பாடத்திட்டமும்,மாகே பகுதியில் கேரளா பாடத்திட்டமும்,ஏனாம் பகுதியில் ஆந்திரா பாடத்திட்டமும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளியில் தமிழ்நாடு அரசின் மெட்ரிக் பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.புதுவை அரசுப் பள்ளிகளில் மட்டும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கடைபிடிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 2024-25 ஆம் கல்வியாண்டு முதல் அரசுப்பள்ளிகளில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டு, முழுமையாக சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டது.

அதைத் தொடர்ந்து,புதுவையில் உள்ள தனியார் பள்ளிகளிலும் படிப்படியாக சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டைப்போல் புதுவையில் இருமொழிக் கொள்கையே கடைபிடிக்கப்பட்டு வந்தது. இதில் அரசுப்பள்ளிகளில் தமிழ், ஆங்கில மொழியும், தனியார் பள்ளிகளில் தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் இவற்றில் ஏதாவது இரண்டு மொழியை மாணவர்கள் படித்து வந்தனர்.

தற்போது பெரும்பாலான பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளியாக மாற்றப்பட்டுள்ளது.இப்பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டு (2026-27) முதல் 6 ஆம் வகுப்பில் இருந்து ஆங்கிலம்,இந்தி,தமிழ் என மும்மொழிகளை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசின் இடைநிலைக் கல்வி வாரியம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இதன்மூலம் பிரெஞ்சு பாடம் நீக்கப்படுகிறது.இதுதொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை சிபிஎஸ்இ இயக்​குநர் பிரக்யாசிங், அனைத்து சிபிஎஸ்இ பள்​ளி​களுக்கும் அனுப்​பிய சுற்​றறிக்​கையில் கூறியிருப்பதாவது….

2026-27 ஆம் கல்​வி​யாண்டு முதல் 6 ஆம் வகுப்​பில் இருந்து மும்​மொழித் திட்​டம் அறி​முகம் செய்​யப்​படு​கிறது.
இது​வரை அமல்​படுத்​தாத மற்ற பள்​ளி​களும், இந்த அறி​விப்பு வெளியான 7 நாட்​களுக்​குள் இந்தத் திட்​டத்தைச் செயல்​படுத்​து​வதை உறு​தி​செய்ய வேண்​டும்.3 ஆவது மொழிகளுக்​கான பாடப்​புத்​தகங்​கள் விரை​வில் கிடைக்​கப்​பெற வேண்டும்.அதே​நேரம் உள்​ளூரில் கிடைக்​கும் புத்​தகங்​கள்,கற்​பித்​தல் வளங்​களைப் பயன்​படுத்தி 6 ஆம் வகுப்​பில் இருந்து மும்​மொழியை பள்​ளி​கள் கற்​பிக்கவேண்​டும்.இதுத​விர பள்​ளி​கள் தாங்​கள் தேர்ந்​தெடுத்த மும்​மொழி விவரங்​களை இறு​தி​ செய்​து,தகவல் தெரிவிக்கவேண்​டும்.

ஒரு பள்ளி, 6 ஆம் வகுப்​பில் எந்த 3 ஆம் மொழியை அறி​முகம் செய்​கிறதோ,அதே மொழி​தான் அந்தப்பள்​ளிக்கான 9, 10-ஆம் வகுப்​பு​களில் விருப்​பப்பாட​மாக இருக்​கும்.எனவே,அனைத்​துப் பள்​ளி​களும் மும்மொழித் திட்டத்தை அமல் செய்​வதை தாமதமின்றி மேற்​கொள்ள வேண்​டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவைப் பின்பற்றி புதுவையில் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டு முதல் பிரெஞ்சு மொழி பாடம் நீக்கப்பட்டு, ஆங்கிலம்,இந்தி,தமிழ் ஆகிய பாடங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.இது பிரெஞ்சு மொழி படித்து வந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இனி வரும் காலங்களில் பிரெஞ்சு பாடம் படிக்கவேண்டும் என்றால்,மாணவர்கள் தமிழ்நாடு பாடத்திட்டத்தைப் பின்பற்றவேண்டும்.ஏற்கனவே புதுவையில் உள்ள பிரபல தனியார்பள்ளிகள் முழுமையாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு மாறிவிட்டன.

சில தனியார்பள்ளிகள் மட்டுமே தமிழ்நாடு பாடத்திட்டத்தைத் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றன.அங்கு மாணவர்கள் சேர்ந்தாலும் பிரெஞ்சு மொழி பாடம் இருக்குமா என்பது கேள்விக்குறிதான்.மும்மொழிக் கொள்கையால் புதுச்சேரியின் அலுவல் மொழிகளில் ஒன்றான பிரெஞ்சு நீக்கப்படுவதற்கு அரசு கடும் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்.

இந்தியை நீக்கிவிட்டு ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு என்ற நிலையில் மும்மொழியை புதுவையில் கடைபிடிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பெற்றோர்,மாணவர்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சிபிஎஸ்இ பள்ளியில் புதிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் மார்ச் 31 ஆம் தேதிக்குள் 6 வயது பூர்த்தியடைந்த மாணவ,மாணவிகளைத்தான் 1 ஆம் வகுப்பில் சேர்க்கவேண்டும் என்ற உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால்,புதுவை அரசுப்பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளியாக மாற்றப்பட்ட பிறகும் பழைய நடைமுறைப்படியே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று ஒன்றிய அரசின் இடைநிலைக் கல்வி வாரியத்திடம் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்கப்படுவதால், அதனை மாணவர்களுக்குப் பயிற்றுவித்து வந்த ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே பிரெஞ்சு படித்தவர்களின் பிரெஞ்சு ஆசிரியர் பணியும் கானல்நீராகி இருக்கிறது.மேலும்,புதுவையில் 12 ஆம் வகுப்புவரை ஏராளமான மாணவர்கள் பிரெஞ்சு படித்துவிட்டு கல்லூரிகளில் பி.ஏ. பிரெஞ்சு சேர்ந்து படிப்பார்கள்.

பிறகு,புதுவை பல்கலைக்கழகம்,காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தில் எம்.ஏ. பிரெஞ்சும் படித்து பட்டம் பெறுவார்கள்.தற்போது பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் நீக்கப்பட்டால் கல்லூரிகளிலும் பி.ஏ.மற்றும் எம்.ஏ., பிரெஞ்சு படிப்புகளில் போதிய மாணவர் சேர்க்கை இன்றி, அந்தப் படிப்புகள் காணாமல் போகும். பிறகு, பிரெஞ்சு பேராசிரியர்களும் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும்.

புதுவையில் கல்வே காலேஜ் அரசு பிரெஞ்சு உயர்நிலைப்பள்ளி, பான்சியோனா அரசு பெண்கள் பிரெஞ்சு உயர்நிலைப்பள்ளி என 2 அரசு பிரெஞ்சு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளிலும் 1 முதல் 10 ஆம் வகுப்புவரை மாணவ,மாணவிகள் பிரெஞ்சு வழியில் படித்து வருகின்றனர்.இங்கு தமிழ்நாடு பாடத்திட்டமும், சிபிஎஸ்இ பாடத்திட்டமும் கடைபிடிக்கப்படவில்லை.பிரான்ஸ் நாட்டு பாடத்திட்டம் கடைபிடிக்கப்படுகிறது. இப்பள்ளி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை கல்வித்துறையும், புதுவை பல்கலைக்கழகமும் இணைந்து வெளியிடுகின்றன. இதனால் மும்மொழிக் கொள்கையால் இவ்விரு பள்ளிகளில் படிக்கும் பிரெஞ்சு மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மும்மொழிக் கொள்கைத் திட்டம் மூலம் இந்தியைத் திணிக்க ஒன்றிய அரசு முயன்று வருவதாக தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு உள்ளது. இந்தத் திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். தமிழ்நாடு பாடத்திட்டம் புதுச்சேரியிலும் கடைபிடிக்கப்பட்டு வந்ததால், மும்மொழிக் கொள்கைக்கு அங்கும் எதிர்ப்பு இருந்தது.

இந்நிலையில், தற்போது மும்மொழிக் கொள்கையை 7 நாட்களுக்குள் அமல்படுத்த ஒன்றிய அரசு கெடு விதித்துள்ளது.இந்த அறிவிப்பை தேர்தலுக்கு முன் வெளியிட்டு இருந்தால் ஆளும் என்.ஆர்.காங்கிரசு, பாஜக கூட்டணி அரசுக்குப் பாதிப்பு வரும் என்பதால் தேர்தலுக்குப் பின் அவசர அவசரமாக அறிவித்துள்ளது. இதற்கு புதுச்சேரியில் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், சிபிஎஸ்இ பிறப்பித்த மும்மொழிக் கல்விக் கொள்கை விவகாரம் தொடர்பாக மாநில கல்வித்துறை எவ்வித முடிவும் எடுக்கவில்லை.தற்போது சட்டமன்றத் தேர்தல் முடிந்து மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படவுள்ளது.தொடர்ந்து,புதிய அரசு பொறுப்பேற்கும்.இதனால் மாநிலஅரசு சிபிஎஸ்இ பள்ளியில் இருமொழிக் கொள்கையா? அல்லது மும்மொழிக் கொள்கையா? என்பதை புதியஅரசுதான் முடிவு எடுக்கும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Response