அமலாக்கத்துறை நடவடிக்கை எதனால்? – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

திமுக சார்பில், என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி சிறப்பு நிகழ்ச்சி நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சொந்தத் தொகுதியான திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட உறையூரில் நடைபெற்றது.

இதில், அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டார்.அங்கு அவர் பேசியதாவது….

ஒன்றிய அரசு என் மீது வழக்கு ஒன்று தொடர்ந்தது. அந்த வழக்கில் நீதிமன்றத்தில் வெற்றியடைந்து விட்டேன். ஆனாலும், தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்று அமலாக்கத் துறை தமிழ்நாடு அரசுக்குக் கடிதம் அனுப்பி உள்ளது.

அந்த வழக்கு, நீதிமன்றத்தில் இருப்பதால் நான் விளக்கமாகச் சொல்ல முடியாது. இருந்தாலும், நீங்கள் சில விசயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்.

நான் எந்தத் தவறும் செய்யவில்லை.ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு நேருவை அடித்தால், இந்தப் (டெல்டா) பகுதியில் திமுகவை அடிக்கலாம் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறது. உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் நிச்சயமாக எந்தத் தவறும் செய்யவில்லை. செய்ததுமில்லை, இனியும் செய்ய மாட்டேன் என்ற உறுதியை மட்டும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். எல்லா விவரங்களையும் என்னால் சொல்ல முடியும். நீதிமன்ற விசாரணைக்கு குந்தகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக நான் சொல்லவில்லை.

இத்தொகுதியில் 5 முறை தேர்தலில் போட்டியிட்ட என்னை 3 முறை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். நீங்கள் வாக்களித்து வெற்றிபெற வைத்த நேருவா இப்படிச் செய்துவிட்டார் என நினைத்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் இந்த விளக்கத்தைச் சொல்கிறேன்.

உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், நிச்சயம் எந்தத் தவறும் செய்ய மாட்டேன். உங்கள் ஆதரவு எப்போதும் திமுகவுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response