
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மற்றும் வாக்குத் திருட்டு ஆகிய குற்றச்சாட்டுகளை முன்னிலைப்படுத்தி இராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ஆகஸ்டு 17 முதல் பீகாரில் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ நடத்தி வருகின்றனர்.
நேற்று பீகாரின் நவாடாவில் நடந்த பேரணியில் பேசிய தேஜஸ்வி யாதவ்,…’
அடுத்த முறை, 2029 மக்களவைத் தேர்தலில் இராகுல் காந்தியை பிரதமராக்குவோம். தேர்தல் ஆணையமும் பாஜகவும் வாக்குகளைத் திருடவும், பீகார் மக்களை முட்டாளாக்கவும் ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளனர். பீகாரிகளின் வாக்களிக்கும் உரிமையை பாஜக பறிக்க விரும்புகிறது.
நாங்கள் பீகாரிகள். ஒரு பீகாரி அனைவரையும் விட உயர்ந்தவர். சிறப்பு தீவிர திருத்தம் மூலம், பீகாரில் உயிருடன் உள்ள வாக்காளர்களின் பெயர்களை நீக்கி, அவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்து பாஜகவின் உத்தரவின் பேரில் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. வரைவு வாக்காளர் பட்டியல்களில் 65 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சிறப்பு தீவிர திருத்தம் என்பது வாக்குகளின் கொள்ளை, அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
நிதிஷ் குமார் தலைமையிலான அரசாங்கம் மிக மோசமாகிவிட்டது, அதை அவசரமாக மாற்ற வேண்டும். இளைஞர்களுக்கு இப்போது ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும். இந்த பழைய மற்றும் மோசமான அரசாங்கத்தை அதிகாரத்திலிருந்து அகற்றுவோம் என்று இளைஞர்கள் தீர்மானித்து விட்டனர்
இவ்வாறு தேஜஸ்வி பேசினார்.
இந்தப் பேச்சில் 2029 மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக இராகுல் காந்தி இருப்பார் என்பதை அவர் சொல்லியிருப்பதும் அவர் பிரதமர் ஆவார் என்றபோது அங்கு கூடியிருந்த மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது என்றும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.இது ஒன்றிய அரசியலில் கவனிக்கத்தக்கதாக மாறியிருக்கிறது.


