நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் செயற்குழுக் கூட்டம் சென்னை அடுத்த பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கட்சியின் தலைவர் நடிகர் விஜய் தலைமை வகித்தார். கூட்டத்தில், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட சுமார் 1,200 பேர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்தத் தீர்மானங்களை விஜய் வாசித்தார்.
அவற்றில், முதல் தீர்மானமாக பரந்தூர் மக்கள் உள்பட விவசாயிகளின் நலன் மற்றும் உரிமைக்காக தமிழக வெற்றிக் கழகம் என்றும் துணை நிற்கும்.
கொள்கை எதிரிகளுடனோ, பிளவுவாத சக்திகளுடனோ என்றும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி இல்லை.
விவசாயிகள் போராட்டத்திற்கு எதிரான அரசின் அதிகார மீறலை கண்டிக்கிறோம்.
மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
நெல் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.
பெரும் நட்டத்தைச் சந்தித்துள்ள மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மலைக்கோட்டையில் நடைபெறும் மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும்.
என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு முழுமையான இழப்பீட்டுத் தொகை, குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரத் தொழிலாளர்களாக்க வலியுறுத்துகிறோம்.
தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனிமவளக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
இரு மொழிக் கொள்கை, தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண கச்சத்தீவை குத்தகை அடிப்டையில் ஒன்றிய அரசு கேட்டுப் பெற வேண்டும்,
தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்துவதன் வாயிலாக சிறுபான்மையினர் வாக்குகளைக் குறைக்க முயற்சிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
கீழடியில் தமிழர் நாகரிகத்தை மூடி மறைக்கும் ஒன்றிய பாஜக அரசுக்குக் கண்டனம்,
தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்குக் கண்டனம்,
பெரியார், அண்ணாவை அவமதிக்கும் பாஜகவின் பிளவுவாத அரசியலைக் கண்டிக்கிறோம்
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர், 2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய். த.வெ.க தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும். தேர்தல் கூட்டணி குறித்த முடிவுகளை எடுப்பதற்கு த.வெ.க தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் உள்ளது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் ஆகஸ்ட் மாதம், த.வெ.க மாநில மாநாடு நடத்தவும், செப்டம்பர் முதல் டிசம்பர் வரை விஜய் சுற்றுப்பயணம் தொடங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
மலிவான அரசியல் ஆதாயத்திற்காக மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தி, மக்களிடையே வேற்றுமையை விதைத்து அதில் குளிர்காய நினைக்கிறது பாஜக. அவர்களுடைய இந்த விஷமத்தனமான வேலைகள் வேறு எங்கு வேண்டுமானாலும் எடுபடலாம். தமிழகத்தில் ஒருபோதும் எடுபடாது. சமூக நீதியும், நல்லிணக்கமும், சகோதரத்துவமும், சமத்துவமும் ஆழமாக வேரூன்றிய மண் இந்த தமிழ்நாட்டு மண். எனவே இங்கே தந்தை பெரியாரை அவமதித்தோ, அறிஞர் அண்ணாவை அவதூறுக்கு உள்ளாக்கியோ தமிழ்நாட்டில் உள்ள மதிப்பிற்குரிய தலைவர்களை வைத்து அரசியல் செய்ய நினைத்தால் அதனால் பாஜகவால் ஒருபோதும் வெற்றி பெற இயலாது.
கொள்கை எதிரிகள், பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி இல்லை என்பதில் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக இருக்கிறது. கூட்டணி என்றாலும் தவெக தலைமையில் அமையும் கூட்டணி திமுக, பாஜவுக்கு எதிராகத்தான் இருக்கும் என்பதையும், அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதையும் உறுதிபட செயற்குழு வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம். இது இறுதியான தீர்மானம் அல்ல. உறுதியான தீர்மானம்.
இவ்வாறு விஜய் பேசினார்.
2026 இல் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஏற்கனவே தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய கட்சிகளின் தலைமையில் கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரசு, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, தவாக, கொமதேக, மமக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அதிமுக கூட்டணியில் பாஜக ஆகிய கட்சிகள் மட்டுமே தற்போது உறுதியாகியுள்ளது. மற்றவை எல்லாம் பாஜக ஆதரவு பெற்ற சிறிய கட்சிகள். பாமக,தேமுதிக ஆகிய கட்சிகள் இன்னும் தங்களது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
நாம்தமிழர் கட்சி தனியாகப் போட்டி என்று அறிவித்துள்ளது.
இந்நிலையில், அதிமுக பாஜக கூட்டணிக்குள் விஜய்யின் தவெகவை இழுக்க பாஜகவும், அதிமுகவும் தீவிரம் காட்டின.இருகட்சித் தலைவர்களும் மாறி மாறி அழைப்பு விடுத்து வந்தனர்.
இந்தச் சூழலில், தவெக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும், முதலமைச்சர் வேட்பாளராக விஜய் முன்னிறுத்தப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிமுக கூட்டணியில் விஜய் கட்சி இடம்பெறாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், விஜய் தங்கள் கூட்டணிக்கு வருவார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த அதிமுக மற்றும் பாஜகவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.