கோலியின் கனவு பலித்தது பெங்களூரு வென்றது – முதலமைச்சர் வாழ்த்து

2025 ஆம் ஆண்டு டி20 மட்டைப்பந்து போட்டிகளின் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது.

இந்தப் போட்டியில் பெங்களூரு அணியும் பஞ்சாப் அணியும் போட்டியிட்டன.

முதலில் பெங்களூரு அணி முதலில் மட்டை பிடித்தது.அந்த அணி 20 ஓவர்களில் 190 ஓட்டங்கள் எடுத்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக பிலிப் சால்ட் மற்றும் விராட் கோலி இணைந்து ஆட்டத்தைத் தொடங்கினர். இருவர் மீதும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், 9 பந்துகளில் 16 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார் சால்ட். பஞ்சாப் அணியின் ஜேமிசன் பந்து வீச்சில் ஸ்ரேயஸ் எடுத்த அபார பிடிப்பு மூலம் அவர் வெளியேற்றப்பட்டார்.

மயங்க் அகர்வால், 18 பந்துகளில் 24 ஓட்டங்கள் எடுத்தார். சஹல் வீசிய முதல் ஓவரில் அவர் ஆட்டம் இழந்தார். பெங்களூரு அணித்தலைவர் ரஜத் பட்டிதார் 16 பந்துகளில் 26 ஓட்டங்கள் எடுத்தார். பந்தில் வேகத்தை குறித்து ஜேமிசன் வீச, எல்பிடபிள்யூ முறையில் அவர் ஆட்டமிழந்தார். இன்னிங்ஸை நிதானமாக அணுகி 35 பந்துகளில் 43 ஓட்டங்கள் எடுத்த விராட் கோலியை அஸ்ம்துல்லா ஒமர்சாய் வீழ்த்தினார். 15 பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்த லிவிங்ஸ்டன்னை ஜேமிசன் எல்பிடபிள்யூ முறையில் வெளியேற்றினார்.

ஜிதேஷ் சர்மா. 10 பந்துகளில் 24 ஓட்டங்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். ஷெப்பர்ட் 17, க்ருணல் பாண்டியா 4, புவனேஸ்வர் 1 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது பெங்களூரு.

பஞ்சாப் தரப்பில் ஜேமிசன் மற்றும் அர்ஷ்தீப் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். அஸ்மதுல்லா, வைஷாக் விஜயகுமார் மற்றும் சஹல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

191 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. இதில் முதலில் இறங்கிய ப்ரியான்ஷ் ஆர்யா 24 ஓட்டங்களும், ப்ரம்சிம்ரன் சிங் 26 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர். அடுத்து வந்த ஜோஷ் இங்லிஸ் 39 ஓட்டங்கள் எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயஸ் ஐயர் ஒரே ஒரு ஓட்டத்துடன் நடையைக் கட்டினார். நேஹால் வதேரா 15 ஓட்டங்ககள் எடுத்தார். ஷஷாங்க் சிங் எடுத்த 61 ஓட்டங்கள் மட்டுமே பஞ்சாப் அணியின் நம்பிக்கையைக் கூட்டியது. எனினும் அடுத்தடுத்து வீரர்கள் ஆட்டமிழந்ததால் அந்த அணி பெரிதும் தடுமாறியது. 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் அணி 184 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதனை அந்த அணியின் வீரர்களும், இரசிகர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தத் தருணத்துக்காகக் காத்திருந்த விராட் கோலிக்கு வாழ்த்து. நீண்டகாலக் கனவைச் சுமந்து வந்த விராட் கோலிக்கு இந்த கிரீடம் பொருத்தமானதாக இருக்கும். அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி முழு பலத்துடன் திரும்பும் என எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

Leave a Response