அதிமுக பாஜக கூட்டணிக்கு இதுதான் காரணம் – உண்மையை உடைத்த ஆர்.எஸ்.பாரதி

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது….

சட்டம் ஒழுங்கு குறித்து சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி சொன்ன பொய்க் குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு முதலமைச்சர் புள்ளிவிவரங்களுடன் தோலுரித்தார். பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி, துயரங்களைக் கொடுக்கக்கூடிய ஆட்சிக்கு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடே சாட்சி. அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி, என அதிமுகவின் அவல ஆட்சியைப் பற்றி முதலமைச்சர் சொன்ன உண்மைகளுக்குப் பதில் சொல்லத் திராணி இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி வழக்கம் போலவே திமுகவை வசைபாடக் கிளம்பியிருக்கிறார்.

கரப்ஷன் ஆட்சியை நடத்திய பழனிச்சாமி, அடுத்த வெர்ஷன் பற்றியெல்லாம் பேசலாமா? பாஜக கூட்டணியில் சேர்ந்த போதே அதிமுகவின் வெர்ஷன் முடிந்துவிட்டது. கூட்டணி ஆட்சி என்று சொன்ன போதே பழனிச்சாமியின் அரசியல் அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டது. அவரது குடும்பமே முடிவுரை எழுதிவிட்டது. பாஜக கூட்டணிக்கு பழனிச்சாமி பம்மியதற்கு மகன் மிதுனே சாட்சி. தேர்தலுக்கு முன்பே மக்கள் தங்களுக்கு அளிக்கப் போகும் படுதோல்வியை மறைக்க விரக்தியில், கேலிக்கூத்துகளை செய்து கொண்டிருக்கிறார் பழனிச்சாமி.

அடிமை ஆட்சிக்கு அதிமுகவே சாட்சி. அதற்கு மக்கள் தொடர்ச்சியாக அதிமுகவுக்கு பரிசளித்த பத்து தோல்விகளே சாட்சி. தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்கும் பாஜகவின் காலடியில் வீழ்ந்து கிடந்து அடிமை அரசியல் செய்து வரும் பழனிச்சாமியை 2026 தேர்தலில் மக்கள் தோற்கடித்து ஓட வைக்கப்போவது உறுதி.
தமிழ்நாட்டை ஆதிக்கம் செய்ய நினைக்கும் பாஜகவுக்கும், அதன் அடிமை அதிமுகவுக்கும் தமிழ்நாட்டு மக்கள் 2026-லும் கெட் அவுட் சொல்லப்போவது உறுதி. இப்போது இருக்கிற 66 அதிமுக எம்எல்ஏ-கள் எண்ணிக்கையில் 2026 இல் 6 கூட கிடைக்காது.

திராவிட மாடல் 2.0, அமையப் போகும் வயிற்றெரிச்சலில் பழனிச்சாமி செய்யும் இந்த கோமாளிக்கூத்துகளைப் பார்த்தால், பரிதாபம்தான் வருகிறது.‘அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு தலை நிமிர்ந்து நின்றது’ என சொல்லியிருக்கிறார் பழனிச்சாமி. சிறப்பான ஆட்சி நடத்தி இருந்தால், தொடர்ந்து 10 தேர்தல்களில் ஏன் அதிமுக தோற்றது? இடி அமின் ஆட்சியை நடத்திவிட்டு ‘இம்சை அரசன்’ போல உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார் பழனிச்சாமி.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் மக்களின் இரத்தம் குடித்த ஆட்சி, பழனிச்சாமியின் ஆட்சி. “அண்ணா பெல்ட்டால அடிக்காதீங்கணா…” என அப்பாவி இளம் பெண்கள் கதறல் கேட்டால், அது பழனிச்சாமி ஆட்சிக்குச் சாட்சி. நீட் உள்பட பல்வேறு மாநில உரிமைகளை சுயநலத்துக்காக டெல்லியிடம் அடகு வைத்த அரசுக்கு பழனிச்சாமியே சாட்சி. தலைவி வாழ்ந்த பங்களாவில் கொலை, கொள்ளை நடந்த ஆட்சிக்கு கோடநாடே சாட்சி. அப்பாவையும் மகனையும் அடித்துக் கொன்றதற்கு சாத்தான்குளமே சாட்சி.

இப்படி பழனிச்சாமி ஆட்சியில் நடந்த அவலங்களையும் அக்கப்போர்களையும் எப்படி மறக்க முடியும். தமிழக வரலாற்றில் பழனிச்சாமியின் நான்கரை ஆண்டு காலம் இருண்டகாலமாகதான் இருந்தது. அரசியலின் கரும்புள்ளி நீங்கள். இனி எந்தக் காலத்திலும் தமிழ்நாட்டில் ஆட்சியை மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களின் மனங்களையும் பிடிக்கவே முடியாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்தஅறிக்கையில்,பாஜகவோடு கூட்டணி கிடையவே கிடையாது என்று உறுதியாகப் பேசி வந்த எடப்பாடி பழனிச்சாமி திடீரென பாஜகவோடு கூட்டணி அமைக்கக் காரணம்,அவருடைய மகன் மிதுனை காப்பாற்றத்தான் என்று அரசியல் வட்டாரங்களில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேசப்பட்டுக் கொண்டிருந்த விசயத்தை அதிகாரப்பூர்வமாகச் சொல்லியிருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி.

Leave a Response