ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையால் தமிழ்நாட்டில் கல்விநிலை பாதிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு கருத்து தெரிவித்தது. ஆனால், புதிய கல்விக் கொள்கை விரைவில் செயல்படுத்தப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது.
மேலும், அது தொடர்பாக பொதுமக்கள் கல்வியாளர்கள் கருத்து கேட்கப்படும் என்று அறிவித்து அதற்கான கால அவகாசமும் வழங்கியது. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையை சில மாநிலங்கள் ஏற்றுக்கொண்டு அதை நடைமுறைப்படுத்தவும் தொடங்கியுள்ளன.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள 16 பல்கலைக்கழகங்களை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகளையும் ஆளுநர் மேற்கொண்டார். அதற்கான நகர்வுகளையும் அவர் செயல்படுத்தத் தொடங்கியதுடன், வேந்தர் என்ற முறையில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் போது தன்னிச்சையாக முடிவெடுத்து, வெளி மாநில நபர்களை தமிழ்நாட்டில் பல்கலை துணைவேந்தர்களாக நியமிக்கவும் செய்தார்.
அதற்கு தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து மாநில அரசின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று தெரிவித்தது. ஆனால் ஆளுநரே பல்கலை வேந்தர் என்பதால் அவர்தான் முடிவெடுப்பார் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.
இந்நிலையில், அவர் மாற்றப்பட்டு புதிய ஆளுநராக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்.என்.இரவி தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவரும் தமிழ்நாடு அரசின் கருத்தைக் கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்கத் தொடங்கினார்.
புதிய கல்விக் கொள்கை தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசின் சார்பில் உயர் கல்வி மற்றும் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆய்வு செய்து மாநில கல்விக் கொள்கையை உருவாக்க குழு அமைத்தது. அந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில் தமிழ்நாட்டில் உயர் கல்வியில் பாடத் திட்டம் அமைக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்தது. இந்நிலையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் மூலமாக செயல்படுத்தப்படும் ஒன்றிய அரசின் சமக்ர சிக்ஷா திட்டத்துக்கான நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்தது. குறிப்பிட்ட காலத்தில் நிதி கிடைக்காவிட்டால் தமிழ்நாடு மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
அதனால் உடனடியாக நிதியை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதப்பட்டது. இருப்பினும், பிஎம்ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்துவதாக ஒப்புக் கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட வேண்டும் என்று ஒன்றிய அரசு வலியுறுத்தியது. இதற்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்ததுடன், ஒரு குழுவை அமைத்து அந்த குழுவின் பரிந்துரையை ஏற்று நடப்போம் என்று தெரிவித்தது. இதற்கும் ஒன்றிய அரசு மவுனமாக இருந்து வந்தது.
இதற்கிடையே, உயர் கல்வித்துறையில் துணை வேந்தர்களை நியமிக்க ஆளுநர் ஆர்.என்.இரவி தன்னிச்சையாக தேடுதல் குழுவை அமைத்தார். அதற்கும் தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவித்த நிலையில், கடந்த ஆண்டில் ஊட்டியில் ஆளுநர் துணைவேந்தர்கள் கூட்டத்தைக் கூட்டி, துணை வேந்தர்கள் ஒன்றிய அரசுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதுபோல் கல்வித்துறையில் ஆளுநர் பல குழப்பங்களை விளைவித்துக் கொண்டே இருந்தார். பல்கலைக்கழங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் ஆளுநருக்கே அதிக அதிகாரம் இருப்பதாக ஆளுநர் இரவி தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் பல்கலை வேந்தராக மாநில முதல்வர் இருப்பார் என்ற சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. அத்துடன் மேலும் 9 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டார். சிலவற்றை திருப்பி அனுப்பினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2 முறை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்திருந்த ஆளுநர் இரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
2025 ஏப்ரல் 8 ஆம் தேதி நீதிபதிகள் பார்திவாலா, மகாதேவன் ஆகியோர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினர். அந்தத் தீர்ப்பில், அரசியலமைப்பு சாசனம் 200 ஆவது பிரிவின்படி ஆளுநர் செயல்பட வேண்டும். மசோதாக்கள் அனுப்பி வைக்கப்படும்போது ஆளுநருக்கு முன் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்தலாம். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்த முடியாது. 2 ஆவது முறையாக அனுப்பி வைக்கப்படும் மசோதா வேறுபட்டால் மட்டுமே ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்க முடியும். 10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
அத்துடன் உச்ச நீதிமன்றமே முன்வந்து மேற்கண்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பின் மூலம் மாநில முதலமைச்சரே பல்கலைக்கழக வேந்தராக இருக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அதைப் பின்பற்றி அரசிதழில் அறிவிக்கப்பட்டு, முதலமைச்சரே வேந்தராக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஏப்ரல் 16 ஆம் தேதி சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழ்நாட்டில் உயர் கல்வியை மேம்படுத்தும் வகையில் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இதில் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் கலந்துகொண்டு தமிழ்நாட்டின் உயர்கல்வியை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், வருகிற 25, 26, 27 ஆகிய தேதிகளில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மூன்று நாள் மாநாடு, நீலகிரியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் எனவும், இந்த மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்பார் என்றும் ஆளுநர் அறிவித்துள்ளார்.
அதன்படி அனைத்து துணைவேந்தர்களுக்கும் அழைப்பும் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்புகள் வெளியாகி உள்ள நிலையில் துணை வேந்தர்கள் இந்த மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.
மாநில அரசின் உயர்கல்வித்துறை அமைச்சருக்கு அழைப்பு விடுக்காமல் ஆளுநரே தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளார். மாநில அரசின் கொள்கைகளுக்கு எதிரான தாக்குதல் தளமாக பல்கலைக்கழகங்களை ஆளுநர் திருப்பும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
சட்டப்படி வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ஆளுநர் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை எப்படி நடத்த முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆளுநரின் அதிகார அத்துமீறல்களை தடுக்க வேண்டிய குடியரசுத் துணைத் தலைவர், இந்த மாநாட்டில் கலந்து கொள்வார் என்று்ம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டின் மூலம் சட்ட நெருக்கடியை உருவாக்க ஆளுநர் முயன்று வருவதாகவும் அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.இரவி பல்கலை கழகங்களுக்கு வேந்தராக இருக்க வேண்டியதில்லை என்பதை ஏற்கனவே சட்டமன்றத்தில் மசோதாவாக நிறைவேற்றி அனுப்பியதுடன், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அதனை சட்டமாகவும் ஆக்கியுள்ளது தமிழ்நாடு அரசு. எனவே, இப்போது ஆளுநர் விடுத்திருக்கும் அழைப்பு உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிப்பதும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதுமாக இருக்கிறது.
இதற்கிடையே, பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டாளர்கள் ஆகியோர் இந்த உத்தரவை ஏற்பதா? வேண்டாமா? என்கிற குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.
ஆளுநர் கூட்டிய கூட்டத்தில் துணைவேந்தர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று சிலர் வற்புறுத்தி வருவதாகவும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் இந்த அழைப்பு சட்டப்படியானது இல்லை என்பதால் இதை ஏற்கவேண்டியதில்லை என்று சட்டவல்லுநர்கள் கூறுகிறார்கள்.
இதனால் இந்த மாநாடு குறிப்பிட்டபடி நடக்காது என்றும் ஆளுநர் இரவி மீண்டும் அவமானப்படப்போகிறார் என்கிற கருத்தும் நிலவுகிறது.