விடுதலைப்புலிகள் மீதான தடை நீட்டிக்க வதந்தி – வேல்முருகன் தகவல்

வன்னியர் சமூக மக்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு கேட்டு 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் உயிர்நீத்த 21 சமூக நீதிப் போராளிகளுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.

2021 ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றப் பேரவை விதி எண் 110ன் கீழ், ‘‘1987 ஆம் ஆண்டு இடஒதுக்கீடு போராட்டத்தில் காவல்துறையினுடைய துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான 21 சமூக நீதிப் போராளிகளின் தியாகத்தை மதிக்ககூடிய வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும்” என்று அறிவித்தார்.

அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி கிராமத்தில், 21 சமூக நீதிப் போராளிகளுக்கு 5 கோடியே 70 இலட்சம் செலவில் அமைக்கப்பட்ட மணிமண்டபத்தை கடந்த மாதம் 28 ஆம் தேதி நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்நிலையில், நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், ச.ம.உ வுமான வேல்முருகன், வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.இராமமூர்த்தி, காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை அவர் கணவர் மனோஜ் உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர்.

அப்போது, வன்னியர் சமூக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 21 சமூக நீதிப் போராளிகளுக்கு மணிமண்டபம் அமைத்த தமிழ்நாடு அரசிற்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்தனர். இந்தச் சந்திப்பின் போது, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

முதலமைச்சர் உடனான சந்திப்பிற்குப் பிறகு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது….

எனது தொகுதியில் மூடப்பட்ட தொழிற்சாலைகளின் நிலங்கள், அரசு வசம் உள்ள பஞ்சமி நிலங்களை வர்த்தக நோக்கத்துக்காகப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. அந்த நிலங்களை மீட்டு வேளாண் கல்லூரி, பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும் என முதல்வரிடம் வேண்டுகோள் வைத்தேன். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் உதவியாளர் பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் வதந்தி. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான ஒன்றிய அரசின் தடையை நீடிக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய நடவடிக்கைகள் ஒன்றிய அரசின் அழுத்தத்தால் மேற்கொள்ளப்படுகின்றன. திருப்பரங்குன்றத்தில் இருதரப்பு மக்களது வழிபாட்டு உரிமையையும் மதித்து அனைவரும் நடக்க வேண்டும். வன்னியர் சமூகத்தின் 21 இடஒதுக்கீடு போராளிகளுக்கும் கோவிந்தசாமிக்கும் மண்டபங்கள் கட்டியதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

காடுவெட்டிகுரு மகள் விருதாம்பிகை செய்தியாளர்களிடம் பேசுகையில்….

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டித் திறந்த முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம். மேலும், வன்னியர் சமூகம் சார்ந்த பல கோரிக்கைகளை முதல்வரிடம் வைத்தோம். அதை நிறைவேற்றித் தருவதாக முதல்வர் கூறினார். மறைந்த காடுவெட்டி குருவுடைய பிறந்தநாள் விழாவிற்கு அனுமதி கேட்ட நிலையில், அரசும் அனுமதி அளித்திருந்தது. அதே போன்று காடுவெட்டி குருவுக்கு வெண்கலச் சிலை அமைக்க அனுமதி கேட்டிருந்த நிலையில் அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்த இரண்டு நிகழ்வுக்கும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தோம்

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response