நாகையில் ஆளுநர் ஆர்.என்.இரவிக்குக் கறுப்புக்கொடி

நாகூர் ஆண்டவர் தர்காவின் 467 ஆம் ஆண்டு கந்தூரி விழா என்பது கடந்த 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த கந்தூரி விழாவின் முக்கிய திருவிழாவான சந்தனக்கூடு ஊர்வலம் இன்று நடைபெறுகிறது.

இதற்காகத் தமிழ்நாஉ ஆளுநர் ஆர்.என்.இரவி, அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், இரகுபதி உள்ளிட்டோருக்கு நாகூர் தர்கா பரம்பரை ஆதினஸ்தர்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதனை ஏற்று ஆளுநர் ஆர்.என்.இரவி, நாகை மாவட்டம் நாகூர் தர்காவுக்கு வருகை தருவதாகத் தெரிவித்திருந்தார்.

இதற்கு முன்னதாக இந்த அழைப்பை இரத்து செய்ய வேண்டும்.ஆர்.என்.இரவி நாகூர் கந்தூரி விழாவிற்கு வரக்கூடாது எனப் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.இரவி, திருச்சி சென்று அங்கிருந்து வாகனம் மூலம் நாகை மாவட்டத்திற்குச் சென்றார்.

அப்போது, கீழ்வேளூரில் காங்கிரசு, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கறுப்புக்கொடி ஏந்தி ஆளுநருக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.

இவர்களை அங்கிருந்த 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இருப்பினும் ஆளுநருக்கு எதிராக கறுப்புக் கொடி ஏந்தி கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது. சுமார் அரைமணி நேரம் நீடித்தது போராட்டம். அதன் பிறகு ஆளுநருக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டிப் போராட்டத்தில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Response