இந்திய அணி தோல்விக்குக் காரணம் என்ன? – ரோகித்சர்மா விளக்கம்

உலகக் கோப்பை மட்டைப்பந்துப் போட்டித் தொடரின் இறுதிப்போட்டி நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நகர் நரேந்திரமோடி மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதின.

முதலில் மட்டை பிடித்த இந்திய அணி 240 ஓட்டங்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் அரைசதம் கடந்தனர். அணித்தலைவர் ரோகித் சர்மா 47 ஓட்டங்கள் எடுத்தார். மற்ற ஆட்டக்காரர்கள் ஓட்டங்கள் சேர்க்கத் தவறினர். ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது.

241 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட்டைத் தொடங்கியது ஆஸ்திரேலியா. வார்னர், மார்ஷ் மற்றும் ஸ்மித் ஆகியோர் விரைந்து ஆட்டமிழந்தனர். இருந்தும் ஹெட் மற்றும் லபுஷேன் இணைந்து 192 ஓட்டங்கள் எடுத்தனர். அது அந்த அணிக்கு வெற்றிக் கூட்டணியாக அமைந்தது. இதன் மூலம் ஆறாவது முறையாக உலக சாம்பியன் ஆனது ஆஸ்திரேலியா.

இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது குறித்து அணித்தலைவர் ரோகித் சர்மா கூறியதாவது……

ஆட்டத்தின் முடிவு நமக்குச் சாதகமாக இல்லை. இந்த நாள் சிறப்பானதாக அமையவில்லை. நாங்கள் முடிந்தவரை முயன்றோம். கூடுதலாக 20 – 30 ஓட்டங்கள் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். கோலியும், ராகுலும் சிறப்பான கூட்டணி அமைத்தனர். நாங்கள் 270 முதல் 280 ஓட்டங்கள் வரை எதிர்பார்த்தோம். ஆனால், தொடர்ந்து வீரர்களை இழந்த காரணத்தால் அது முடியாமல் போனது.

240 ஓட்டங்களில் வெற்றியைத் தக்க வேண்டுமெனில் சீரான இடைவெளியில் எதிரணி வீரர்களை வீழ்த்த வேண்டும். நாங்கள் அதைச் செய்ய விரும்பினோம். இருந்தும் ஹெட் – லபுஷேன் இடையில் அமைந்த கூட்டணி அந்த வாய்ப்பைப் பறித்தது. இரவு நேரத்தில் மின் ஒளிக்குக் கீழ் விளையாடுவது மட்டைபிடிக்க சிறப்பானதாக இருந்தது என்பதை உணர்ந்தேன். அதைக் காரணமாகச் சொல்லித் தப்பிக்க விரும்பவில்லை. மட்டைபிடித்தபோது ஓட்டங்களைக் குவிக்கத் தவறினோம்.நம்து பந்துவீச்சாளர்கள் 3 பேரை வீழ்த்தி சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். மேற்கொண்டு ஒருவரை வீழ்த்தி இருந்திருந்தால் அதன் தாக்கம் வேறு விதமாக இருந்திருக்கும்.

இவ்வாறு ரோகித்சர்மா தெரிவித்தார்.

Leave a Response