சீமான் மீது மிகைநடவடிக்கை – பெ.மணியரசன் குற்றச்சாட்டு

சீமான் மீது போட்ட பழிவாங்கும் வழக்குகளைக் கைவிடுக என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்……

நாம் தமிழர் கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்வது தமிழ்நாட்டு ஆட்சியாளர்களின் பழிவாங்கும் நடவடிக்கையாகவே உள்ளது.

தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்களில் ஆவேசமாகப் பேசுவோர் மீதெல்லாம் வழக்குகள் பதிவு செய்தால், இப்போதுள்ள காவல்துறையும் போதாது; நீதிமன்றங் களும் போதாது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமது கட்சி வேட்பாளரை ஆதரித்துப் பேசும்போது, தமிழ்நாட்டில் வடவர் வெள்ளம் புகுந்து தமிழர் தாயகத்தைச் சிதைப் பதைத் தடுக்கும் நோக்குடன், அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துப் பேசினார் சீமான். இந்தி மண்டலத்தைச் சேர்ந்த கருத்துப் பரப்பல் வணிக நிறுவன உரிமையாளர் பிரசாந்த் கிஷோர் அதைப் பெரிது படுத்தி சீமானைக் கைது செய்க என்று தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கோரிக்கை வைத்தார். உடனடியாக – சீமான் மீது பிணை மறுப்புப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விட்டார்கள்.

அதே தேர்தல் பரப்புரையில் அருந்ததியர் குறித்து, சீமான் செய்த விமர்சனத்தில் எமக்கு உடன்பாடில்லை. ஆனால் அதற்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி வழக்குப் போட்டது மிகை நடவடிக்கையாகும். தீண்டாமையை ஆதரித்து அவர் பேசவில்லை.

திருச்சி நடுவண் சிறைக்குள் ஒரு தனிமைச் சிறை அமைத்து, இராசீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டு சிறைவாசத்திற்குப் பின் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட முருகன், சாந்தன், இராபர்ட் பயாஸ், செயக்குமார் ஆகியோரைத் தமிழ்நாடு அரசு அடைத்து வைத்துள்ளது. இதைக் கண்டித்து அவர்கள் சிறைக்குள் உண்ணாப் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களின் விடுதலை கோரி திருச்சியில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தலைமையில் 23.03.2023 அன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதற்காக சீமான் உட்பட 500 பேர் மீது பிணை மறுப்புப் பிரிவில் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். அதே ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய மருது மக்கள் இயக்கத் தலைவர் திரு. முத்துப்பாண்டி அவர்கள் மீது தனி வழக்குப் போட்டுத் தளைப்படுத்தி சிறையில் அடைத்துள்ளார்கள்.

தி.மு.க. ஆட்சியின் இவ்வழக்குகள், சனநாயக உரிமைப் பறிப்பு மட்டுமல்ல; பழிவாங்கும் தன்மை கொண்டவை. இந்த அனைத்து வழக்குகளையும் கைவிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response