2023 தமிழர் திருநாள் பரிசு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதைத் தொடர்ந்து கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி 21 வகையான பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. அதில் பொங்கல் தயாரிக்கத் தேவையான பொருட்கள் உள்பட சமையலுக்குத் தேவையான பொருட்களும் அடங்கி இருந்தன.

அதுபோன்று, 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி பரிசுத் தொகுப்பு வழங்கப்படுமா? ரொக்கத்தொகை வழங்கப்படுமா? என்பது குறித்த பல்வேறு செய்திகள் வெளியாகி வந்தன.

இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு தைப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடிட பரிசுப் பொருட்கள் வழங்குவது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையைத் தொடர்ந்து, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்….

2023 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வருகிற 2023 ஆம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கிட முடிவு செய்யப்பட்டது.

இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதன்மூலம் அரசுக்கு சுமார் ரூ.2,356.67 கோடி செலவினம் ஏற்படும். முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வை வருகிற 2.1.2023 அன்று சென்னையிலும், அன்றைய தினமே மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்களும் தொடங்கி வைப்பார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response