299 பொறியாளர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லை – நெய்வேலி என் எல் சி க்கு எதிராக டிடிவி.தினகரன் போர்க்கொடி

மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனம் புதிதாக பொறியாளர்களைத் தேர்வு செய்தது. இதுதொடர்பான பட்டியல் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட பொறியாளர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 299 பேரில் ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. என்எல்சி நிறுவனம் சுற்று வட்டாரப்பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் போது அப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தது.

ஆனால் இதற்கு எதிராக தமிழகத்தைச் சாராத பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது நிலங்களை வழங்கியவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட பொறியாளர்களின் பட்டியல் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடைமுறையை இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், வெளியிட்டுள்ள பதிவில்….

நெய்வேலி என் எல் சி நிறுவனத்தில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட பொறியாளர்களில் ஒருவர்கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாட்டின் வளத்தை எடுத்து தொழில் நடத்தும் பொதுத்துறை நிறுவனம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைப் புறக்கணிப்பது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல.

உடனடியாகப் புதிய பொறியாளர் தேர்வுப் பட்டியலை இரத்துசெய்துவிட்டு என் எல் சி க்கு இடம் கொடுத்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த தகுதியுள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாய்ப்பு வழங்கவேண்டும்.

என் எல் சி நிறுவனம் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைப் புறக்கணிக்கும் நிலைப்பாட்டை எடுத்தால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் களத்தில் இறங்கிப் போராடும்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response