கர்நாடகத்துக்கு ஆதரவாக இயங்கும் காவிரி ஆணைய அதிகாரி – கல்லணைக்கு வந்தபோது கறுப்புக்கொடி காட்டிய விவசாயிகள்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக உள்ள எஸ்.கே.ஹல்தர், நடுநிலை தவறிய நபர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே துச்சமாகப் புறக்கணிக்கக்கூடியவர். காவிரி ஆணையக் கூட்டத்தின் வழியாக ஒரு தடவைகூட கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய காவிரி நீரைப் பெற்றுத் தராதவர். அதற்கான முயற்சியில் ஈடுபடாதவர்.

அவர், உச்ச நீதிமன்றம் விதித்த அதிகார வரம்பை மீறி, கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்டிக் கொள்ள அனுமதி வழங்கக்கூடிய ஆவேசத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அந்த அதிகாரம் ஆணையத்திற்குக் கிடையாது. அண்மையில் இந்திய அரசின் சட்ட அமைச்சகத்தின் அறிவுரையைப் பெற்றதாகவும், அது மேக்கேதாட்டில் அணை கட்டுவது குறித்து முடிவெடுக்க காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் இருக்கிறது எனக் கூறியதாகவும், அடுத்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு எதிர்த்தாலும் மேக்கேதாட்டு பற்றிய பொருள் விவாதிக்கப்படும் என்றும் 06.06.2022 அன்று செய்தி வெளியிட்டார்.

மேற்படி ஆணையத்தின் கூட்டம் 17.06.2022 அன்று புதுதில்லியில் நடைபெறும் என்று அறிவித்த ஹல்தர், இப்பொழுது அக்கூட்டத்தை 23.06.2022-க்கு மாற்றி வைத்துவிட்டு, தமிழ்நாட்டுக் காவிரி அணைகளை நேரில் பார்த்து ஆய்வு செய்வதாகக் கூறிக் கொண்டு, 16.06.2022 அன்று பில்லிகுண்டுலு பகுதியைப் பார்வையிட்டுள்ளார். 17.06.2022 அன்று முற்பகல் மேட்டூர் அணை மற்றும் சரபங்கா கால்வாய்த் திட்டம் ஆகியவற்றை பார்வையிட்டுவிட்டு, மாலை 3 மணிக்கு திருச்சி கல்லணையைப் பார்வையிட்டுள்ளார்.

இதையொட்டி காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் விடுத்துள்ள அறிக்கையில்….

மேக்கேதாட்டு அணை அனுமதி குறித்து, காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்கக் கூடாது என்று காவிரி உரிமை மீட்புக் குழுவும், மற்றும் விவசாய சங்கங்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், தமிழ்நாடு அரசு மேக்கேதாட்டு அணை குறித்து ஆணையத்தில் விவாதிக்க தடையாணை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஹல்தரின் நடுநிலை தவறிய மேக்கேதாட்டு ஆதரவுப் போக்கைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி, தலைமையமைச்சர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இப்பின்னணியில், பருவம் தவறிப் பெய்த மழையினால் மேட்டூர் அணை நிரம்பியிருப்பதையும் காவிரி டெல்டா பகுதிகளுக்குத் தண்ணீர் தாராளமாகப் பாய்ந்து கொண்டிருப்பதையும் பார்த்துவிட்டு, தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரைக் கர்நாடகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது என ஆணையக் கூட்டத்தில் பேசவும், தமிழ்நாடு அரசும் கர்நாடகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேட்டூர் – சரபங்கா கால்வாய்த் திட்டம், காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துகிறது என்று பொருத்தமற்ற இலாவணிக் கச்சேரி பாடுவதற்காகவும் இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டிருப்பதாக ஐயம் ஏற்படுகிறது.

ஏனெனில், அவர் ஆணையத் தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்து ஒரு தடவை கூட உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி வாராவாரம் / மாதாமாதம் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரைத் திறந்துவிடச் செய்து செயல்படுத்திக் காட்டியதே இல்லை! பருவமழை மற்றும் பருவந்தவறிய மழை வெள்ளங்களால் மிகை நீரைக் கர்நாடகம் திறந்துவிட்டதை ஒட்டியும், கர்நாடக அணைகளுக்குக் கீழ்ப் பகுதியிலும் தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியிலும் மழை நீர் ஓடி வந்ததாலும் மேட்டூர் அணைக்குத் தண்ணீர் வந்து, கடந்த சில ஆண்டுகளாக குறுவை – சம்பா சாகுபடி நடந்து வருகிறது. அத்துடன், கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறை காலத்தில் கூட இந்த ஹல்தர் தமிழ்நாட்டுப் பக்கம் எட்டிப் பார்த்ததில்லை.

மனச்சான்று உருத்தலின்றி, நடுநிலை தவறி கர்நாடகத்தின் சட்டவிரோதச் செயல்களுக்குத் துணையாக செயல்படக்கூடிய நபர் இந்த ஹல்தர் என்பதை மோடி அரசு புரிந்து கொண்டுதான், இவருடைய பணி ஓய்வுக்குப் பிறகு இவரை ஐந்தாண்டுகளுக்குக் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக அமர்த்தியது. இவர் இந்திய அரசின் நீராற்றல் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த காலத்தில்தான் கர்நாடக அரசிடம் மேக்கேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்து அனுப்புமாறு இவரே வலிந்து கேட்டு வாங்கி, அதற்கு அனுமதி கொடுத்து, அதை காவிரி மேலாண்மை ஆணைய அனுமதிக்கு அனுப்பி வைத்தார்.

இப்பொழுது அந்த மேக்கேதாட்டு திட்டத்திற்கு ஆணையம் அனுமதி கொடுப்பதற்கு எல்லாச் சதிகளையும் செய்கிறார். நம்முடைய காவிரித் தாயின் மார்பறுக்க வரும் ஹல்தருக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டி திரும்பிப் போ என்று கண்டன முழக்கமெழுப்புவது தமிழ்நாட்டு உழவர்களின் கடமை மட்டுமல்ல, அனைத்து மக்களின் கடமையுமாகும்!

காவிரி உரிமை மீட்புக் குழு உழவர் பெருமக்களும் உணர்வாளர்களும் இன்று (17.6.2022) பிற்பகல் 2.30 மணி முதல் கல்லணையில் திரண்டு, அங்கு வரும் எஸ்.கே. ஹல்தருக்குக் கருப்புக் கொடி காட்டி திரும்பிப் போ என்று அறவழியில் முழங்குவார்கள்! வாய்ப்புள்ள தமிழ் மக்கள் அனைவரும் இந்தக் காவிரிக் காப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

என்று அழைப்பு விடுத்திருந்தார்.

அவருடைய இந்த அழைப்பை ஏற்று,

காவிரியின் குறுக்கே கர்நாடகம் மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு சட்ட விரோதமாக முயன்று கொண்டிருக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர், 17.06.2022 அன்று மாலை கல்லணையைப் பார்வையிட வந்தபோது, காவிரி உரிமை மீட்புக் குழுவைச் சேர்ந்த உழவர்களும், தமிழர் உரிமை உணர்வாளர்களும் கருப்புக் கொடி காட்ட முனைந்து முழக்கமிட்டனர். அவர்களைக் காவல்துறை ஹல்தர் வருவதற்கு முன்பே, கைது செய்து திருக்காட்டுப்பள்ளி திருமண மண்டபத்தில் அடைத்தது.

காவிரி உரிமை மீட்புக் குழு பொருளாளர் த.மணிமொழியன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் நா.வைகறை, தமிழக விவசாயிகள் சங்கத் திருச்சி மாவட்டத் தலைவர் ம.ப.சின்னத்துரை. தமிழர் தேசிய முன்னணி திருவாரூர் மாவட்டச் செயலாளர் ச.கலைச்செல்வம், த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் பி. தென்னவன், திருச்சி மாநகரச் செயலாளர் வே.க.இலக்குவன், மன்னார்குடி கண்ணன் (காவிரி உரிமை மீட்புக் குழு), ஐயனாபுரம் சி.முருகேசன் (தமிழர் தேசிய முன்னணி), வெள்ளாம்பெரம்பூர் துரை இரமேசு (காவிரி உரிமை மீட்புக் குழு), சு.பழனிராசன் (சமவெளி விவசாயிகள் சங்கம்), வழக்கறிஞர் கென்னடி (மா.லெ. திருச்சி) உள்ளிட்ட 40 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டோர் திருக்காட்டுப்பள்ளியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.

கருப்புக் கொடி காட்ட வந்தோர் அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டார்கள் என்று தெரிந்து கொண்டு, கல்லணை பயணிகள் விடுதியிலிருந்து வெளியே வந்த ஹல்தரின் மகிழுந்துக்கு முன்பாக, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தினர் திருச்சி இனியன், தமிழரசன், குடந்தை கி. பிரபாகரன், பா.திருஞானம், பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.விடுதலைச்சுடர், பொதுக்குழு உறுப்பினர் க.தீந்தமிழன் ஆகிய 6 பேர் கருப்புக் கொடி காட்டி முழக்கமெழுப்பினர். அப்போது காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து, தோகூர் காவல் நிலையத்தில் வைத்தனர்.

இதுகுறித்து பெ.மணியரசன் கூறியிருப்பதாவது….

தமிழ்நாடு காவல்துறை மிகவும் கெடுபிடி செய்து, கருப்புக் கொடி காட்டும் சனநாயக உரிமையை மறுத்து, முன்கூட்டியே உழவர்களையும், உணர்வாளர்களையும் கைது செய்து மண்டபத்தில் அடைத்துவிட்டது. தமிழ்நாட்டுக் குடிநீராகவும், பாசன நீராகவும் 22 மாவட்டங்களுக்குப் பயன்படக் கூடிய காவிரி ஆற்றை மற்றுமொரு பாலாறாக மாற்றும் நோக்கத்துடன், இந்திய அரசும், அதன் அதிகாரியான ஹல்தரும் சட்ட விரோதமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த அதிகாரிக்குச் சனநாயக வழியில் கல்லணையில் கருப்புக் கொடி காட்டக் கூட அனுமதிக்கவில்லை தமிழ்நாடு அரசு!

இந்திய அரசு தமிழ்நாட்டின் உரிமைகளை எவ்வளவு பறித்தாலும், அதை எதிர்ப்பது போல் பாவனை காட்டிவிட்டு, இந்திய அரசுக்கு விசுவாசம் காட்டும் வகையில் உரிமைப் போராட்டங்களை ஒடுக்குவதுதான் மு.க.ஸ்டாலின் அவர்களின் “திராவிட” மாடலோ? தமிழ்நாடு அரசின் இந்த சனநாயக விரோத நடவடிக்கைகளைக் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு கோருகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response