திட்டமிட்டபடி தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் ஒன்று முதல் 10 ஆம் வகுப்பு வரை திட்டமிட்டபடி ஜூன் 13 ஆம்தேதி பள்ளிகள் திறக்கப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை என்று அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

திருச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று அளித்த பேட்டி……

தமிழக முதல்வர் உத்தரவின்படி மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு 234 தொகுதிகளிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தீர்வுகாண வேண்டும். திருச்சி மாவட்டத்தில் பல மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சில மனுக்கள் பரிசீலனை செய்து, அதற்கும் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆட்சியில் இல்லாதபோதும், இருக்கும் போதும் கலைஞரின் கொள்கைப்படியே மாநிலத்திற்கு என தனி கல்விக்கொள்கை உருவாக்கப்படும்.

திட்டமிட்டபடி ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை வரும் 13 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்புக்கு 20ம் தேதியும், 11 ஆம் வகுப்பிற்கு 27 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை.

இந்தத் தேதிகளில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாற்றம் இருந்தால், அது குறித்து முதல்மைச்சரின் அலுவலக அதிகாரிகள் தெரிவிப்பார்கள். அதனடிப்படையில் தெரிவிப்போம். பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் ஜூலை, செப்டம்பர் மாதங்களில் தேர்வு எழுத வேண்டும். அவர்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம். அடுத்த மாதம் நடக்க உள்ள ‘நீட்’ தேர்வுக்கு தடை வாங்கக் கூறுபவர்கள்தான், விலக்கு அளிக்க வேண்டியவர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response