பிரதமர் மோடி தமிழகம் வருகை – ட்விட்டர் டிரெண்டிங்கில் திரும்பிப்போ மோடி

சென்னையில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்துக்கு மாலை 5.10 மணிக்கு வரும் பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்கின்றனர்.

பின்னர் விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு செல்கிறார்.

மேலும் மாற்று ஏற்பாடும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். அடையார் வந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு அவர் செல்ல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

நேரு விளையாட்டரங்கத்துக்கு 5.45 மணிக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு இரவு 7 மணி வரை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சியில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான 11 மக்கள் நலத்திட்டங்களை அவர் தொடங்கிவைத்துப் பேசுகிறார்.

நிகழ்ச்சிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். பிரதமர் மோடி 11 திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதில் ரூ.2,900 கோடி மதிப்பிலான 5 நிறைவடைந்த திட்டங்களை அவர் தொடங்கிவைப்பதுடன் ரூ.28,500 கோடி மதிப்பிலான 6 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் செய்கிறார்.

பிரதமர் மோடி தொடங்கிவைக்கும் நிறைவடைந்த திட்டங்கள் வருமாறு:-

பிரதம மந்திரி வீட்டு வசதி-நகர்ப்புறம் திட்டத்தில் சென்னையில் ரூ.116 கோடியில் அமைக்கப்பட்டு உள்ள 1,152 வீடுகள் திறப்பு.

மதுரை-தேனி இடையே ரூ.500 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 75 கி.மீ. ரெயில் பாதைத் திட்டம்.

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே ரூ.590 கோடியில் போடப்பட்டுள்ள 3 ஆவது ரெயில் பாதைத் திட்டம்.

எண்ணூர்-செங்கல்பட்டு இடையே ரூ.850 கோடியில் 115 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள இயற்கை எரிவாயு குழாய் திட்டம்.

திருவள்ளூர்-பெங்களூரு இடையே 271 கி.மீ. தூரத்துக்கு ரூ.910 கோடியில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை எரிவாயு குழாய் திட்டம்.

பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்படும் திட்டங்கள் வருமாறு:-

சென்னை-பெங்களூரு இடையே 262 கி.மீ. தூரத்துக்கு ரூ.14,870 கோடியில் அதிவிரைவுச் சாலை அமைத்தல்.

சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே 21 கி.மீ. தூரத்துக்கு ரூ.5,850 கோடியில் 4 வழிச் சாலையுடன் கூடிய இரட்டை அடுக்கு மேம்பாலம் அமைத்தல்.

தர்மபுரி-நேரலுரு இடையே 94 கி.மீ. தூரத்துக்கு ரூ.3,870 கோடியில் 4 வழி சாலை அமைத்தல்.

சிதம்பரம்-மீன்சுருட்டி இடையே ரூ.720 கோடியில் 31 கி.மீ. தூரத்துக்கு நடைபாதையுடன் கூடிய இருவழிச் சாலை அமைத்தல்.

சென்னை எழும்பூர், இராமேஸ்வரம், மதுரை, காட்பாடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 தொடர்வண்டி நிலையங்களை ரூ.1,800 கோடியில் மேம்படுத்துதல்.

சென்னையில் ரூ.1,400 கோடி மதிப்பில் பன்முக தளவாடப் பூங்கா அமைத்தல்.

நிகழ்ச்சி முடிந்ததும் இன்று இரவே பிரதமர் டெல்லி திரும்புகிறார். சென்னை வரும் பிரதமரிடம் தமிழகம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி மனு அளிப்பார் என்று கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி, இணை மந்திரி வி.கே.சிங், ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், பெட்ரோலியம் துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன். கர்நாடக, ஆந்திர முதல்-மந்திரிகள் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, ஆந்திர பிரதேச முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, எதிக்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.பி.க்கள் விழாவில் பங்கேற்கின்றனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் செய்து உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே மோடி தமிழகத்துக்கு வந்தால் திரும்பிப்போ மோடி என்று சொல்லும்வகையில Go Back Modi எனும் குறியீட்டுச் சொல்லைப சமூகவலைதளங்களில் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது வழக்கம். இம்முறையும் காலையில் இருந்தே அந்த எதிர்ப்புக் குறியீட்டுச்சொல் டிவிட்டர் டிரெண்டிங்கில் முன்னால் இருக்கிறது.

Leave a Response