29 ரூபாய் ஏற்றிவிட்டு 6 ரூபாய் குறைத்திருக்கிறார்கள் – தமிழ்நாடு நிதியமைச்சர் தகவல்

பெட்ரோல், டீசல் மீதான வரியை ஒன்றிய அரசு நேற்று குறைத்து அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 8 ரூபாய் 22 காசுகள் குறைந்து 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யபடுகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் 70 காசுகள் குறைந்து 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை குறைவு மக்களுக்கு சற்று நிம்மதியைக் கொடுத்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியைக் குறைத்தபோது, உள்ளூர் வரியைக் குறைக்காத மாநிலங்கள் இப்போது அவற்றைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசு வலியுறுத்தி இருந்தது.

இந்த நிலையில், இது குறித்து தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பதாவது:-

எந்த மாநிலத்தின் கருத்தையும் கேட்காமல் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது. 2014- முதல் பெட்ரோல் ரூ. 23(250%), டீசல் ரூ.29 (900 %) என மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

தற்போது உயர்த்தப்பட்ட விலையில் இருந்து 50 சதவீதம் குறைத்துவிட்டு மாநிலங்களைக் குறைக்கச் சொல்லி வலியுறுத்துகிறார்கள். இதுதான் கூட்டாட்சியா?

என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Response