கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட வேண்டிய இனக்கொலை சிறிலங்காவின் அதிபர் கோத்தபய இராசபக்சேவை சிறப்பு விருந்தினராக அழைக்காதே! என்று தமிழ்நாடு, இந்திய அரசுகளுக்கு ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்….
சிறிலங்கா அதிபர் கோத்தபய இராசபக்சே வருகின்ற அக்டோபர் 20 அன்று உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள குஷிநகருக்கு வருவதாகச் செய்திகள் வருகின்றன. கெளதம புத்தர் முத்தி அடைந்த திருத்தலம் என்று நம்பப்படும் குஷிநகரில் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் திறப்பு விழாவுக்கு அவர் வருகிறார்.
அப்போது அவர் தலைமை அமைச்சர் மோடியைச் சந்திக்கவிருக்கிறார் என்றும் செய்திகள் வருகின்றன.
ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு புரிந்த போர்க்குற்றங்கள், மாந்த குலத்திற்கு எதிரானக் குற்றங்கள், இனக்கொலைக் குற்றங்களுக்காக பன்னாட்டுப் புலனாய்வு செய்யப்பட வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2013 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூடவே, சிறிலங்கா மீது பொருளியல் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அப்போது தமிழ்நாடு அரசின் சார்பாக ஒன்றிய அரசிடம் முன்வைக்கப்பட்டது.
சிறிலங்காவை அரசியல், பொருளியல், பண்பாட்டுத் தளத்தில் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் இருந்து தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
ஆயினும் இந்திய அரசு இந்நாள்வரை இதற்குச் செவிமடுக்கவில்லை, தமிழினத்தை அழிக்கும் சிறிலங்காவுடன் நட்புப் பாராட்டியே வருகிறது.
இதற்கிடையே கடந்த மாத இறுதியில் ஐ.நா. பொது அவைக் கூட்டத்திற்காக நியூயார்க் சென்ற கோத்தபய இராசபக்சே காணாமலாக்கப்பட்டோருக்கு மரணச் சான்றிதழ் தருவதை விரைவுப்படுத்துவதாக தெரிவித்தார். அதாவது காணாமலாக்கப்பட்டோர் எவரும் உயிருடன் இல்லை என்பதே அதன் பொருளாகும்.
சுமார் 18,000 த்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் முள்ளிவாய்க்காலில் போர் முடிவுற்ற நிலையில் சிங்களப் படையினரிடம் கையளிக்கப்பட்டோர் ஆவர்.
புதுவை இரத்தினதுரை, யோகி, பேபிசுப்பிரமணியம், பாலகுமாரன் போன்ற விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புகழ்பெற்ற முன்னோடிகள் இப்படி கையளிக்கப்பட்டவர்கள் ஆவர்.
சுமார் 50 க்கும் மேற்பட்ட சிறுவர்களும் அப்போது கையளிக்கப்பட்டிருந்தனர். அக்காலத்தில் பாதுகாப்புத் துறைச் செயலராக இருந்தவர் இப்போதைய அதிபர் கோத்தபய. கையளிக்கப்பட்டோரை உயிருடன் பாதுகாத்து இருக்க வேண்டிய பொறுப்புடையவர் கோத்தபய. ஆகவே, அவர்கள் உயிருடன் இல்லை என்றால் அவர் பொறுப்புக்கூற வேண்டியவராகிறார்.
ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான ஆணையர் மிசேல் பசலே 2021 சனவரி 27 நாளிட்ட A/HRC/46/20 அறிக்கையில் சிறிலங்கா நிலைமை குறித்து வெளியிட்ட அறிக்கையில், அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்காவை நிறுத்துவதைத் தவிர பொறுப்புக் கூறலுக்கு வேறு வழியில்லை என்ற முடிவைத் தெரிவித்தார்.
கூடவே, அனைத்தளாவிய அல்லது எல்லைக்கடந்த மேலுரிமை அல்லது அதிகார வரம்புக்கான (extraterritorial or universal jurisdiction) கோட்பாடுகளின் அடிப்படையில், உறுப்பரசுகள் தமது நாட்டில் சிறிலங்காவில் பன்னாட்டுக் குற்றங்கள் செய்த அனைத்துத் தரப்பினர் மீதும் உள்நாட்டுப் புலனாய்வு செய்ய முடியும் என்றும், மோசமான மாந்தவுரிமை மீறல்களைச் செய்தவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு எதிரான பயணத் தடைகள், சொத்து முடக்கம் குறித்து பரிசீலிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
நீதியின்பால் அக்கறை கொண்ட நாடுகள் மனிதவுரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள சிங்களப் படை அதிகாரிகள், அரசத் தலைவர்கள் மீது அனைத்துலக மேலுரிமையைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழர்கள் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
இன அழிப்புப் போரின் போது சிறிலங்கா அரசின் 58 ஆவது படையணிக்கு தலைமை தாங்கிய சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்க அரசு பயணத்தடை விதித்துள்ளது என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
அந்த வகையில், கோத்தபய இராசபக்சேவுக்கு பயணத் தடை விதிக்க வேண்டும், அவர் இந்தியாவுக்கு வந்தால் கைது செய்ய வேண்டும் என்பதே தமிழர்களின் கோரிக்கையாகும்.
ஆனால், ஒன்றிய அரசோ அவரை அரசு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்துக் கொண்டிருப்பது ஈழத் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புக்குத் துணைப்போவதாகும்; தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு செய்யும் இரண்டகமாகும்.
ஐ.நா. மனிதவுரிமை ஆணையரின் பரிந்துரையைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவை தீர்மானங்களுக்கு இணங்க கோத்தபய இராசபக்சேவுக்கு அழைப்புக் கொடுத்துள்ள இந்திய ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
இனக்கொலை குற்றவாளி கோத்தபயவை கைது செய்து சிறையிலடைக்குமாறு ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு கோரிக்கை வைக்கவேண்டும்.
தமிழ்நாடெங்கும் உள்ள தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் இனக்கொலை சிறிலங்காவின் அதிபர் கோத்தபய இராசபக்சேவை அழைக்கும் பாசக தலைமையிலான இந்திய ஒன்றிய அரசைக் கண்டித்து வாய்ப்புள்ள மாவட்டங்களில் போராட்டங்களை முன்னெடுக்குமாறு கூட்டமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுடன்,
கொளத்தூர் தா.செ.மணி
ஒருங்கிணைப்பாளர், ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு – தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்
கு.இராமகிருஷ்ணன்,பொதுச்செயலாலர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்.
பெ.மணியரசன்,தலைவர், தமிழ்த்தேசிய பேரியக்கம்.
தியாகு,பொதுச்செயலாளர், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்
பாலன்,பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி
செந்தில்,ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழகம்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.