மாமன்னன் இராசேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்ப் பேரரசன் அரசேந்திர சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது…….

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் இராசேந்திர சோழனால் ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள அருள்மிகு பிரகதீசுவரர் ஆலயம் உலகப் புகழ் வாய்ந்த ஒன்றாகும். முதலாம் இராசேந்திர சோழனின் கட்டடக்கலைகளின் காலம் முதல் சோழர்களின் கலை மற்றும் அழகிய தொகுப்பாகவும், வாழும் வரலாறாகவும் விளங்குகிறது. அண்மையில், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ (UNESCO) உலகப் புராதன பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பினைக் கண்டுகளித்திட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

அரியலூர் மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் மாமன்னன் இராசேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவாதிரை விழாவானது அப்பகுதிவாழ் மக்களால் வெகு விமர்சையாகவும் சிறப்புடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.

மாவட்ட அளவில் கொண்டாடப்படுகிற இவ்விழாவினை அரசு விழாவாகக் கொண்டாட அப்பகுதிவாழ் மக்கள் வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர்கள் சார்பில் பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இக்கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருள்மிகு பிரகதீசுவரர் ஆலயத்தில், மாமன்னன் இராசேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவினை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் அரசு விழாவாகக் கொண்டாட உத்தரவிட்டுள்ளார்.

தற்பொழுது நிலவி வரும் கொரோனா நோய்த் தொற்று காரணமாக, வரும் ஆண்டு முதல் இந்த விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசேந்திர சோழன் வரலாறு…..

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி. பழந்தமிழர் வரலாறு என்பது கற்பனை சித்திரங்களால் கட்டப்பட்ட காகிதக்கோட்டை அல்ல. அஃது வீரமும் அறமும் செழித்தோங்கிய தொல் மரபினத்தின் வாழ்வியலையும், பண்பாட்டு நகர்வுகளையும், வரலாற்றுத் தடங்களையும் பெருமிதத்தோடு பொன் எழுத்துக்களால் எழுதப்பட்டது. அதில் தன் ஆளுமைத்திறனால், பல்லாயிரம் யானைகள் ஏற்றும் அளவிற்கு மரக்கலங்கள் பல கட்டி கடலைக் கடந்து, தன் வீர மறத்தால் உலகை புலிக்கொடியின் கீழ் ஆண்ட ஒப்பற்ற தமிழ்ப்பேரரசன் அரசேந்திர சோழன் எனும் இராஜேந்திர சோழன்.

காலவெள்ளத்தால் அழியாத வண்ணம், வானை முட்டும் கோபுரத்தோடு தஞ்சை பெருவுடையார் கோவிலை எழுப்பி, வான்புகழ் கொண்ட அரசர்க்கரசர் அருண்மொழி சோழன், ஆடி திருவாதிரை நாளில் பெற்றெடுத்த புவி ஆண்ட புலி மைந்தன் அரசேந்திர சோழன். வடநாடு வரை படையெடுத்து வங்காளத்தை ஆண்ட மகிபாலனை வென்று தனக்கென ஒரு தலைநகரமாக கங்கை கொண்ட சோழபுரத்தைக் கண்ட பெரும் மன்னன் அரசேந்திரன்.

கிபி 1014 முதல் கிபி 1044 வரையிலான அவரது பொற்கால ஆட்சியில், தற்போதைய இந்தியப் பெருநிலத்தில் மத்திய பிரதேசம் சட்டீஸ்கர், ஒரிசா வரை இருந்த எண்ணற்ற தேசங்கள், மலேயா, சிங்கப்பூர் சுமத்ரா தீவுகள், கம்போடியா இந்தோனேசியா என தென் கிழக்கு ஆசியா முழுவதும் சோழப் பேரரசை விரியச் செய்து, தெற்காசியப் பெருங்கண்டத்திலேயே அதிகப் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பினை வென்றெடுத்து, ஆண்ட மாமன்னராகத் திகழ்ந்தவர் அரசேந்திர சோழன்.

கடற்போரில் சிறந்து விளங்கியமையால் கடற்புலி எனவும் கடல் வென்ற சோழன் எனவும் பெருமையாக அழைக்கப்படுகிறார். கடல்கடந்த வெற்றிகளைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் மக்கள் வறுமை தீர்க்க நீர் மேலாண்மையை வெற்றிகரமாகக் கையாண்டவர். இன்றளவும் வறண்ட நிலப்பரப்பாகக் காட்சி தரும் அரியலூர் மாவட்டத்தில் கங்கை கொண்ட சோழபுரம் என்னும் மாபெரும் தலைநகரை உருவாக்கி அதற்கென ஏறக்குறைய இருபது மைல் நீளம் உடைய, பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கிய ஏரியினைக் கட்டி பல்லுயிர் சூழல் காத்த உயிர்மநேய மன்னன் அரசேந்திர சோழன்.

கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்றளவும் நம் கண்கள் முழுக்க ஆச்சரிய கனவாக விரிந்து வானை முட்டி உயர்ந்து நிற்கிற அந்த மகத்தான கோவில் அரசேந்திர சோழனின் கலை ஆர்வத்தை, தமிழர்களின் படைப்பாற்றலை உலகத்திற்குப் பறை சாற்றுகிற ஆவணச் சாட்சியமாக விளங்குகிறது.

அலைகடல் மீது படைபல நடத்தி, கங்கையும், கலிங்கமும், கடாரமும், இலங்கையும் வென்று, பாயும் புலிக்கொடி பட்டொளி வீசி பறந்திட, தென் கிழக்காசியா முழுமையும் சோழப்பேரரசின் வெண்கொற்றக்குடையின்கீழ் கொண்டுவந்து, உலகின் நான்காவது பெரும் பேரரசை நிறுவிய மாமன்னன் அரசேந்திரச்சோழன்.

தமிழர்களின் வீரத்தையும், தீரத்தையும், அறத்தையும், அறிவையும், ஆற்றலையும் பார் போற்றப் பறைசாற்றி, தமிழினத்தைப் புகழின் உச்சியில் ஏற்றிய தமிழ்ப்பேரரசன் அரசேந்திரச்சோழன் பிறந்த ஆடி திருவாதிரை நாளினை அரசு விடுமுறை நாளாக அறிவித்து, தமிழினத்தின் ஒப்பற்ற பெருவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடிட வழிவகை செய்துள்ளது தமிழ்நாடு அரசு.

Leave a Response